ஸ்ரீலங்கா நாடாளுமன்றில் களேபரம்! அடுத்தவாரம் வருகின்றது அறிக்கை
நாடாளுமன்ற வளாகத்திலும் சபைக்குள்ளும் ஏப்ரல் 21ஆம் திகதி அன்று இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் ஆராய்ந்து , அதற்காக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த பரிந்துரைகளை முன்வைப்பதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை அடுத்த வாரம் சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தனவிடம் கையளிக்கப்படவுள்ளது.
பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தலைமையிலான இக்குழுவில் அமைச்சர்களான சமல் ராஜபக்க்ஷ, கெஹலிய ரம்புக்வெல்ல, இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, நாடாளுமன்ற உறுப்பினர்களான அநுர பிரியதர்ஷன யாப்பா, இம்தியாஸ் பாக்கீர் மாக்கர், ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் உறுப்பினர்களாகச் செயற்படுகின்றனர்.
ஏப்ரல் 21ஆம் திகதி ஏற்பட்டது போன்று குழுப்பமான சூழ்நிலை மீண்டும் நாடாளுமன்றத்தில் ஏற்படாதிருப்பதற்கு எவ்வாறான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதை பரிந்துரைப்பதற்காக சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்த்தனவால் கடந்த ஏப்ரல் 23ஆம் திகதி இந்தக் குழு நியமிக்கப்பட்டது.
இதற்கமைய இதுபோன்ற சம்பவங்களினால் ஒட்டுமொத்த நாடாளுமன்றத்திலும் ஏற்படக்கூடிய பாதகமான விளைவுகள் குறித்து விரிவாக ஆராய்ந்த இக்குழு, எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்களைத் தடுப்பதற்கான நீண்டகால மற்றும் குறுகியகால நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளது.
இது தொடர்பான முழுமையான அறிக்கையை சபாநாயகரிடம் கையளிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.