கடைத்தொகுதியில் பாரிய தீ பரவல் - முற்றுமுழுதாக எரிந்து நாசமான கடைகள்
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாஞ்சோலை பொது வைத்தியசாலைக்கு முன்பாகவுள்ள கடைத்தொகுதியில் இன்று காலை (16) பாரிய தீவிபத்து ஏற்பட்டது.
பலத்த போராட்டங்களுக்குப் பின்னர் தற்போது கடைத்தொகுதியில் ஏற்பட்ட தீ பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த தீ பரவலானது முதலில் MVM உணவகத்தில் ஆரம்பித்து அருகில் உள்ள ANSAF பாதணிக் கடைக்கு பரவி பாரிய தீ விபத்தாக மாறியது.
முற்றுமுழுதாக எரிந்து நாசம்
இதில் குறித்த உணவகம் மற்றும் பாதணிக் கடை முற்றுமுழுதாக எரிந்து அழிவடைந்துள்ளதோடு அருகில் உள்ள மேலும் இரு கடைகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.
இந்த தீபரவல் ஏற்பட்டதும் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை, கரைதுறைப்பற்று பிரதேச சபை, கடற்படையினர் , இராணுவத்தினர் விரைந்து நீர்த்தாங்கிகள் மூலம் தீ பரவலை காலை 9.30 மணியளவில் முற்றுமுழுதாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் தீயணைப்பு படைப்பிரிவு இல்லாமையினால் கிளிநொச்சி மாவட்டத்தின் உதவியை மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு நாடியிருந்தது.
இருப்பினும் தீ பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதனால் கிளிநொச்சி மாவட்ட தீயணைப்புப் படைப்பிரிவின் உதவி கோரிக்கை இடைநிறுத்தப்பட்டது.
தீயணைப்புப் பிரிவு இல்லாமை
இந்நிலையில் குறித்த பகுதிக்கு நேரடியாக சென்ற வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் நிலமைகள் குறித்து ஆராய்ந்துள்ளார்.
அதேவேளை முல்லைத்தீவு மாவட்டத்தில் தீயணைப்புப் பிரிவொன்று இல்லாமையினாலேயே கூடுதல் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
எனவே முல்லைத்தீவு மாவட்டத்தில் தீயணைப்பு பிரிவொன்றை ஏற்படுத்துவதுதொடர்பில் தம்மால் உரிய நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் இதன்போது தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
