போராட்டகாரர்களின் எதிர்ப்பையடுத்து வந்த வண்டியிலேயே திரும்பி சென்ற காவல்துறை
இரண்டாம் இணைப்பு
கொழும்பில் காலி முகத்திடலில் இடம்பெறும் போராட்டத்தை தடுக்க குவிக்கப்பட்ட கலகத்தடுப்பு காவல்துறையினர் போராட்டகாரர்களின் கடும் எதிர்ப்பையடுத்து வந்த காவல்துறை வண்டியிலையே திரும்பி சென்றனர்.
இரண்டு காவல்துறை வாகனங்களில் வந்த அவர்களை பொதுமக்கள் அமைதியான போராட்டத்திற்கு வந்ததன் நோக்கம் குறித்து கேள்வி எழுப்பியதைத் தொடர்ந்து திரும்பி சென்றனர்
முதலாம் இணைப்பு
காலிமுகத்திடல் பகுதியில் வழமைக்கு மாறாக திடீரென காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இந்த நிலையில் அப்பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.
கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொள்ளும் வாகனங்களுடன் அப்பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்ட நிலையில், இதுவரையில் அமைதியான முறையில் போராட்டத்தை மேற்கொண்டு வந்த மக்கள் குழப்பமடைந்துள்ளனர்.
இதனை தொடர்ந்து அங்கு அமைதியின்மை ஏற்பட்டுள்ளதுடன், எங்களை சுடுவதற்காகவா இங்கு வந்தீர்கள், முடியுமானால் எங்களை சுட்டுத்தள்ளுங்கள் என தமது பலத்த எதிர்ப்பினை காட்டி காவல்துறையினரை அங்கிருந்து அனுப்பும் முயற்சியில் போராட்டக்காரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
அத்துடன் அரச தலைவர் செயலகத்திற்கு முன்பாகவும் காவல்துறையினர் பலர் பாதுகாப்பு கடமைக்காக வந்துள்ளதுடன், தற்போது போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
23 நாட்களாக அரச தலைவர் செயலகத்தின் நுழைவாயிலானது போராட்டக்காரர்களின் முற்றுகைக்குள் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.