யாழ்ப்பாணம் செல்லவுள்ள முன்னாள் சிறிலங்கா அரச தலைவர்!
சிறிலங்காவின் முன்னாள் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன (Maithripala Sirisena) இம்மாத இறுதிக்குள் யாழ்ப்பாணம் செல்லவுள்ளதாக சிறிலங்கா சுதந்திர கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் (Angajan Ramanathan) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தனது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தொடர்ந்தும் அவர் தனது பதிவில்,
சிறிலங்கா சுதந்திர கட்சியின் யாழ்.மாவட்ட மாநாடு எதிர்வரும் பெப்ரவரி 20ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில், இம்மாநாட்டில் கலந்து கொள்வதற்காக, சிறிலங்கா சுதந்திர கட்சியின் தலைவரும், நாட்டின் முன்னாள் அரச தலைவருமான மைத்திபால சிறிசேன யாழ் மாவட்டத்துக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார் என குறிப்பிட்டுள்ளார்.
இம்மாநாட்டுக்கான அழைப்பிதழை, யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும், யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான அங்கஜன் இராமநாதன் இன்று உத்தியோகபூர்வமாக கையளித்தார்.
இதன்போது, யாழ் மாவட்ட மக்கள் கடந்த காலத்தில் தமக்கு வழங்கிய ஆதரவை நினைவுகூர்ந்த அவர், யாழ் மாவட்ட மக்களை சந்திப்பதற்கு ஆர்வமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.