அரச ஊழியர்களுக்கு விசேட விடுமுறை - அடுத்த வாரம் முதல் நடைமுறைக்கு...
வெள்ளிக்கிழமைகளில் விடுமுறை
அரச ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமைகளில் விடுமுறை வழங்கும் விசேட வேலைத்திட்டம் அடுத்த வாரம் முதல் நடைமுறைப்படுத்தப்படும் என பொது நிர்வாக அமைச்சர் தினேஷ் குணவர்தன அறிவித்துள்ளார்.
கொழும்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
எரிபொருள் நெருக்கடி
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், ''நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி உள்ளிட்ட எரிசக்தி நெருக்கடிக்கு தீர்வாக இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
அடுத்த வாரத்தில் இருந்து இதை நடைமுறைப்படுத்த நம்புகிறோம்.
தற்போது, எரிபொருள் விலையேற்றத்தால் வேலைக்குச் செல்வதற்கும், திரும்புவதற்கும் பெரும் கூடுதல் செலவு ஏற்படுவதை அரசு ஊழியர்கள் அறிந்திருக்கிறார்கள்.
அவர்கள் வசிக்கும் பகுதியில் விவசாயத்தில் ஈடுபட விரும்பினால், அவர்களுக்கு பொது நிர்வாக அமைச்சின் உதவி மற்றும் பல்வேறு நிவாரணங்கள் வழங்கப்படும்” என்றார்.