ஹோர்முஸ் நீரிணையில் நட்பு நாடுகளின் கப்பல்களுக்கு அனுமதி : ஈரான் அறிவிப்பு
ஹோர்முஸ் நீரிணை வழியாகப் பயணிக்கும் கப்பல்களுக்கான புதிய கட்டுப்பாடுகள் மற்றும் அனுமதிகள் குறித்து ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி (Abbas Araghchi) முக்கியமான அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த நீரிணையில் பயணக் கட்டணங்களை வசூலிப்பதற்கான சட்டமூலங்களை ஈரான் நாடாளுமன்றம் தயாரித்து வரும் பின்னணியில் அமைச்சர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
ஹோர்முஸ் நீரிணை வழியாகப் பயணிக்கும் போது இந்தியா, சீனா, ரஷ்யா, ஈராக் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் கப்பல்களுக்கு எவ்விதத் தடையுமின்றி அனுமதி வழங்கப்படும் என அமைச்சர் அப்பாஸ் அராக்சி உறுதிப்படுத்தியுள்ளார்.
எண்ணெய் போக்குவரத்து கப்பல்கள்
இந்த நாடுகளுடனான ஈரானின் நீண்டகால இராஜதந்திர மற்றும் வர்த்தக உறவுகளைக் கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன் ஹோர்முஸ் நீரிணையின் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு முழுமையாக ஈரானின் கட்டுப்பாட்டிலேயே உள்ளது எனவும் எமது நட்பு நாடுகளின் வர்த்தக மற்றும் எண்ணெய் போக்குவரத்து கப்பல்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது எமது கடமையாகும் என அவர் மேலும் தெரிவித்தார்.
அதேவேளை, இப்பிராந்தியத்தில் பதற்றத்தை உருவாக்கும் ஏனைய நாடுகளின் கப்பல்கள் மற்றும் ஈரானுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடும் தரப்புகளின் நடமாட்டங்கள் குறித்துக் கடும் கண்காணிப்பு நிலவும் என்றும் அவர் எச்சரித்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |