தமிழனை வீழ்த்துவதில் இன்றுவரை தோற்கும் சிங்களப் பேரினவாதம்!
1948 - எம்மை ஆண்ட பிரித்தானியரிடம் இருந்து சுதந்திரம் கிடைத்தாலும், அந்த சுதந்திரத்தை தமிழனுக்கு பகிர சிங்களப் பேரினவாதிகள் விரும்பவில்லை.
1958 - இல் பெரும்பான்மை சிங்களமயமாக்கம் என்ற கொள்கையின் அடிப்படையில், தமிழனுக்கு எதிரான இனவெறி ஆட்டத்தை முதன் முதலில் ஆரம்பித்தார்கள்.
அப்போது அவர்களுக்குத் தெரியாது தமிழன் வீறு கொண்ட ஒரு வேங்கை என்று.
1981 - கலையாலும், கல்வியாலும் உச்சத்தில் இருந்த தமிழனின் வளர்ச்சியை சீர்குலைக்க யாழ் நூலகத்தை எரித்து சாம்பலாக்கி அவனது கல்விப்பயணத்தை மட்டுமல்ல அவனது வரலாற்று ஆதாரங்களையும் அழித்தார்கள்.
அப்போதும் தமிழன் ஓயவில்லை.

மீண்டும், தமிழன் தஞ்சம் புகுந்த கோவில்கள், தேவாலயங்கள் என்று குறிவைத்து விமானம் கொண்டு குழந்தைகைள், பெரியவர்கள் என்று கூடப் பார்க்காமல் குண்டுமழை பொழிந்தார்கள்.
அப்போதும் தமிழன் ஆக்ரோஷம் கொண்டு எழுந்தானே தவிர அவர்களுக்கு அடங்கிப்போகவில்லை.
தமிழர் தாயகத்தில் அவர்களின் சிங்களக் காடையர்களை உள்ளே இறக்கி தமிழனின் வயல் நிலங்களையும், வீடுகளையும் எரித்து அவனது வாழ்வாதாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க எண்ணினார்கள்.
அதிலும் அவர்களுக்கு தோல்வியே எஞ்சியது, இம்முறை அவர்களின் ஆயுதத்தைக் கொண்டே அவர்களை எதிர்க்க தமிழன் துணிந்து விட்டான்.
1987 - ஒன்றுபட்டால் தமிழனுக்கு உண்டு வாழ்வு என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும், அது நடந்துவிடாமல் இருக்க, பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டிவிடும் இந்தியாவின் கையை நாடினார்கள்.

அமைதிப்படை எனும் பெயரில் இறக்கினார்கள் இந்திய இராணுவத்தை தமிழர் தாயகத்தில்.
சிங்கள பேரினவாதத்தின் நேரடியான இராணுவ அடக்குமுறையால் கூட தமிழனை எதுவும் செய்ய முடியவில்லை, ஆனால் அப்போதைய இந்திய அரசின் நரித்தந்திரத்தோடு, இந்திய இராணுவம் தமிழர் தயக்கத்தினுள் நுழைந்தது.
ஆயிரக்கணக்கான தமிழர்களை கொன்று, தமிழனின் ஒற்றுமையையும் உடைத்து சிங்கள ஆட்சியாளர்களுக்கு உதவியது இந்தியாவின் அமைதிப்படை.
இந்தியாவின் பங்களிப்புடன் கொள்கையில் ஒன்றுபட்டிருந்த தமிழர்களின் சிந்தனைகளை தவிடுபொடியாக்கி பல பிரிவுகளாக உடைத்தார்கள், அதில் ஓரளவு வெற்றியும் கண்டார்கள்.
இந்தியாவின் உதவியுடன் துண்டுகளாக தமிழ் இனத்தை உடைத்தாலும் பேரினவாதிகளின் தலைவலி குறையவில்லை.
இருப்பினும், இலங்கை அரசின் உந்துதலில் இந்திய இராணுவம் நடத்திய நயவஞ்சகமான தாக்குதல்களையும் தமிழன் முறியடித்தான், உண்ணாவிரதத்தின் மூலமும், உயிர்த் தியாகங்களையும் செய்து அவர்களை பிரம்மிக்க வைத்து விட்டான்.
1990 - இதனால் இந்தியாவும், இந்திய இராணுவமும் பின் வாங்கி, இந்தியாவை நோக்கி விரைந்தது.

தமிழனாய் கொண்ட கொள்கையில் உறுதியாய் இருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுதம் ஏந்தி தமிழினத்தின் விடுதலைக்காக இலங்கை இராணுவத்தின் ஆக்கிரமிப்பை எதிர்த்து உக்கிரமாய் போரிட ஆரம்பித்தார்கள்.
மீண்டும் பலம் பெற்றான் தமிழன், அவர்களால் என்ன செய்வது என்று தெரியவில்லை, வடக்கு கிழக்கு தமிழர் தாயகங்களை தாண்டி அவர்கள் பலப்படுத்தி வைத்திருந்த தலைநகர் கொழும்பையும் ஆட்டம் காண வைத்தான் தமிழன்.
தற்கொலைத் தாக்குதல்களின் மூலம், தாய் மண்ணுக்காக தனது உயிரைத் துச்சமாக நினைக்கும் அவனது வீரம் இலங்கை அரச இராணுவத்திற்கு பயத்தையும், சிங்கள மக்களுக்கு ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது.
பெண்களாலும் ஆயுதம் ஏந்தி உரிமையை வென்றெடுக்க முடியும் என்பதை சர்வதேசத்திற்கும் தமிழன் நிரூபிக்க ஆரம்பித்தான்.
தமிழர் தாயக்தை நோக்கிய அவனது கொள்கை தெளிவாக உள்ளது என அவனது அடுத்தடுத்த பலம் பொருந்திய தாக்குதல்களின் மூலம் சிங்களப் பேரினவாதிகளுக்கு தெளிவாகத் தெரிந்தது.

2001 - அவனது ருத்ர தாண்டவத்தில் அவர்களது இராணுவ அரனாக பயன்படுத்தப்பட்ட கட்டுநாயக்காவும் சிதைக்கப்பட்டது.
இதன் விளைவால் இலங்கையின் பொருளாதாரம் மாபெரும் சரிவைச் சந்தித்ததும் உண்மை, வரலாற்றில் இல்லாத பணவீக்கமும் ஏற்பட்டது.
தாயக மீட்பிற்காய் அவன் போராடிய வேகம் நாளுக்கு நாள் அதிகரித்தது.
2002 - நேரடித் தாக்குதலின் மூலம் தமிழனை வீழ்த்த முடியாது என அவர்கள் நன்றாகவே புரிந்து கொண்டார்கள்.
வெளியில், அரசியல் எதிரிகள் என்று காட்டிக்கொண்டாலும், தமிழனை அழிப்பதிலும், அவனை அடக்குவதிலும் சிங்கள ஆட்சியாளர்கள் ஒற்றுமையாகவே இருந்தார்கள்.
ஆளுங்கட்சியிலும், எதிர்க்கட்சியிலும் இருந்த ஆட்சியாளர்கள் தமிழனின் ஆட்டத்தை அடக்கி அவனை வீழ்த்த மறைமுகத் திட்டங்களை வகுக்க ஆரம்பித்தார்கள்.

2004 - தமிழனை தமிழனின் மூலமே வீழ்த்தலாம் என்பதை புரிந்து கொண்ட அவர்கள், பேச்சு வார்த்தை எனும் பெயரில் அழைத்து அற்ப சொற்ப சலுகைகளையும், ஆசைகளையும் காண்பித்து பல தமிழ்த் துரோகிகளை உருவாக்க எண்ணினார்கள், அதில் ஓரளவு வெற்றியும் கண்டார்கள்.
இனித் தமிழனின் கதை முடிந்து விட்டது, இலகுவாய் அவனை வீழ்த்தி விடலாம் என முட்டாள்தனமாக எண்ணினார்கள்.
அப்போதும் அவன் சோரவில்லை, எதிர்பாராத அடிகள் அவர்கள் மேல் விழ ஆரம்பித்தது.
ஓயாத அலையாய், அசுர வேகத்தில் அவன் மண்ணில் இருந்த இலங்கையின் அரச படைகளை பின் நகர்த்தினான்.
தமிழன் எனும் வேங்கையின் வேகத்தையும், விவேகத்தையும் கட்டுப்படுத்தியே ஆக வேண்டும் என சிங்கள தேசமே காத்துக்கொண்டிருந்த சமயம், தமிழனைக் கட்டுப்படுத்த முடியாமல் பேரினவாதிகள் திண்டாடிக் கொண்டிருந்த சமயம்,
2005 - இலங்கை இராணுவத்தைக் காக்கவும், தமிழினத்தின் மீதான இன வெறியை மீண்டும் ஆரம்பிக்கவும், பேரினவாதிகளில் ஒருவன் ஆட்சி பீடம் ஏறினான்.
அவனை விட, அவனது சகாக்களும், சகோதர்களும் நினைத்ததை விட தமிழனின் மீதான கொடூரங்களையும், அட்டூழியங்களையும் மிகச்சிறப்பாகவே செய்யத் தொடங்கினார்கள்.
அப்போது மீண்டும் உச்சம் தொட்டது தமிழனுக்கு எதிரான இனவெறிகள், இருந்தும் ஓயாத தமிழன் அவர்களின் செயல்கள் ஒவ்வொன்றிற்கும் தக்க நேரத்தில் தகுந்த பதிலடிகளின் மூலம் தான் யார் என நிரூபித்துக் கொண்டிருந்தான்.

2007 - அத்தனை பாதுகாப்பு வலையங்களையும் கடந்து அனுராதபுரத்திலும், கட்டுநாயக்கா விமான நிலையத்திலும் அவன் செய்த சாகசத்தை இன்றும் சிங்கள தேசத்தால் மறக்க முடியாது.
மாற்றி மாற்றி பல தந்திரத் திட்டங்களைப் போட்டாலும், தமிழர் தாயகத்தை அவர்களால் முற்றாக நெருங்க முடியவில்லை.
அவனது பதில் தாக்குதல்கள் தமிழர் பகுதிகளைத் தாண்டி அவர்களது தென்பகுதிக்கும் ஒலித்தது.
விமானப்படைத் தாக்குதல்கள், தற்கொலைத் தாக்குதல்கள் என்று சொல்லி அவன் ஆடிய ஆட்டம் தென்பகுதியையும் நிலை குலைய வைத்தது.
மண்ணுக்காகவும், உரிமைக்காகவும் போராடும் தமிழ்ப் போராளிகளின் முன்னால் வெறுமனே சம்பளத்திற்காக போரிடும் இலங்கை இராணுவத்தினர் வீழ்வதை அவர்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

2009 - இம்முறை தெளிவான முறையில் திட்டத்தை வகுத்தார்கள். இலங்கையின் வளங்களை அடகு வைத்து சர்வதேச நாடுகளின் பெரும் பங்களிப்புடன் தமிழனுக்கு குருதியினால் சரித்திரம் எழுத ஆரம்பித்தார்கள்.
இலங்கைக்காகவும், இலங்கையின் வளங்களுக்காகவும் ஏப்பமிட்டு காத்துக் கொண்டிருந்த நாடுகளுக்கு தமிழன் பலிக்கடாவானான்.
தமிழனை அழித்தால் இலங்கை நமக்குரியதாகும் என எண்ணிய நாடுகள் நவீன ஆயுதங்களையும், இராணுவத்தையும் அள்ளிக் கொடுத்தன.
சர்வதேசத்தின் உதவியுடன் தமிழ் இனத்திற்கு எதிரான இனப் படுகொலைகளை மீண்டும் உக்கிரமாய் அரங்கேற்ற ஆரம்பித்தார்கள்.
தமிழினப் படுகொலைகளை ஒவ்வொன்றாக அரங்கேற்றி முள்ளிவாய்க்காலில் தமிழனின் ஆயுதப் போராட்டத்தை மௌனிக்கச் செய்தார்கள்.

முள்ளிவாய்க்காலுடன் தமிழனின் சரித்திரம் முடிந்து விட்டது என மார்தட்டிக் கொண்டார்கள்.
பாற்சோறு காய்ச்சி, பட்டாசுகளை வெடித்து, தமிழினத்தின் பிரேதங்களிலும், குருதியிலும் மேலே நின்று சிங்கக்கொடி ஏற்றி தமது வெற்றியைப் பறைசாற்றினார்கள்.
புதிய நாணயங்களை வெளியிட்டு தமிழ் இனத்தையே வென்று விட்டதாய் முழு உலகுக்கும் காட்டினார்கள்.
மீண்டும் தமிழன் ஆயுதம் ஏந்தினால் அவனைத் தடுக்க இயலாது என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும். அதனால்தான், வெள்ளைக் கொடியுடன் சரணடைந்தவர்களைக் கொன்றார்கள், தமிழ்த் தாய்மார்கள் ஒப்படைத்த பிள்ளைகள் எங்கே எனத் தெரியாமல் கதை எழுதினார்கள்.
தடுப்புகளில் வைக்கப்பட்ட போராளிகளை விடுதலை செய்தாலும் அவர்களிற்கு நீண்ட நாள் வாழ்வதற்கான சந்தர்ப்பத்தை வழங்கவில்லை, பயங்கரவாத தடைச் சட்டத்தின் மூலம் கைதுகளைத் தொடர்ந்தார்கள், அரசியல் கைதிகளை விடுதலை செய்ய மறுத்தார்கள்.

2009 இன் பின் - இத்தனை கொடூரங்களை செய்தும் தமிழ் இனத்திற்கு எதிரான அவர்களின் பசி அடங்கவேயில்லை.
தமிழனின் பூர்வீக நிலங்களை ஆக்கிரமித்தார்கள், புத்தர் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இங்கு வாழ்ந்ததாகக் கூறி அதில் விகாரைகளையும் அமைத்தார்கள்.
அதற்கு அவர்களது இராணுவத்தை காவல் வைத்தார்கள்.
தற்போது - மீண்டும் தமது நரித் தந்திரத்தை பாவிக்க ஆரம்பித்துள்ளார்கள்.
காரணம், ஒருமுறை ஆயுதம் ஏந்திய தமிழனை அடக்கவே 30 ஆண்டுகளுக்கு மேல் அவர்கள் படாத பாடுபட்டு விட்டார்கள்.
மீண்டும், தமிழ் இளைய சமுதாயம் ஆயுதத்தாலும், பேனையினாலும் புரட்சி செய்து விடக்கூடாது என்பதற்காய் தமிழர் பகுதியில் அவர்கள் இறக்கிய அணு ஆயுதம் "போதைப்பொருள்"

போதை உலகில் மூழ்கும் தமிழ் இளைய சமுதாயம் படிப்படியாக தங்களையும் அழித்து தமிழினத்தையும் அழித்து விடுவார்கள் என்பதே அவர்களின் திட்டம்.
மீண்டும், உரிமைக்காக போராட ஆரம்பித்திருக்கும் தமிழனின் சரித்திரத்தை அதே தமிழனின் கரம் கொண்டு அழித்தாலேயன்றி சிங்களப் பேரினவாதிகளால் முடியாது.
அன்று தமிழ்ப் பெண்களை கற்பழித்தார்கள், தமிழர்களைக் கடத்தினார்கள், கொலை செய்தார்கள், வீடுகளுக்குள் புகுந்து கொள்ளையிட்டார்கள்.
இத்தனை இன்னல்களிலும் தமிழன் சிங்கள மக்களை எதுவும் செய்யவில்லை.
தமிழனின் தாக்குதல்கள் தமிழர் தாயகத்தை ஆக்கிரமிக்கும் இலங்கை இராணுவத்தை நோக்கி இருந்ததே தவிர சிங்கள மக்களை எதுவும் செய்யவில்லை.
ஆனால் அவர்களின் இனவெறி ஆட்டம் முழுத் தமிழ் இனத்தையும் சார்ந்ததாகவே இருந்தது.

சிங்களவர்களின் நிலங்களை தமிழன் ஆக்கிரமிக்கவும் இல்லை, சிங்களப் பெண்களை அவன் கற்பழிக்கவும் இல்லை, சிங்கள மக்கள் மீது அவன் குண்டு மழை பொழியவுமில்லை, அவர்களை அடக்கி ஆளவும் நினைக்கவில்லை.
இவை யாவற்றுக்கும் சந்தர்ப்பம் கிடைத்தும் அவன் அதைச் செய்யவில்லை, ஏனெனில் தமிழனது கொள்கையும், உரிமைக்காகவும், தாயக மீட்பிற்காய் அவனது போராளிகள் ஏற்ற பாத்திரமும், தமிழனின் மனதில் உள்ள ஈரமும் அதை செய்ய விடவில்லை, இதனால் தான் இன்றுவரை அவன் தமிழன் என்று போற்றப்படுகிறான்.
ஆனால் அவர்கள் அவ்வாறு நினைக்கவில்லை, ஏனெனில் இலங்கைத் தீவு எங்களினுடையது என்கிறார்கள், இது அவர்களின் பௌத்த நாடு என்கிறார்கள், வாழ்ந்தால் தமிழன் அவர்ளின் அடிமையாக வாழ வேண்டும், இல்லையேல் இலங்கையில் இருந்து தமிழனின் இருப்பு இல்லாமல் ஆக்கப்படும்.
இந்தக் கொள்கையை அவர்களின் ஆட்சியாளர்களும், சிங்கள மக்களும் எப்போதும் மாற்ற மாட்டார்கள்.
ஒற்றைத் தமிழ் இனத்தை அழிக்க ஆயுதத்தை பயன்படுத்தினார்கள், அவர்களால் முடியவில்லை, இந்திய இராணுவத்தை இறக்கினார்கள், அதுவும் வெற்றியளிக்கவில்லை, மக்கள் மேல் குண்டுகளை பொழிந்து மிரட்டினார்கள், அதுவும் சரிவரவில்லை, சர்வதேசத்தை நாடினார்கள் , இனப்படுகொலைகளை செய்தார்கள், இப்போது போதைப்பொருள் மூலம் இன அழிப்பு.

1948 - 2023 :- இத்தனை இனப்படுகொலைகள், அட்டூழியங்கள், அடக்குமுறைகள், சூழ்ச்சிகள், புலனாய்வாளர்களின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் தனது உரிமைக்காக போராடும் தமிழனை அவர்களால் இன்றுவரை தோற்கடிக்க முடியவில்லை.
தமிழனைத் தோற்கடிப்பதாய் நினைத்து அவர்கள் தோற்றுக்கொண்டே போகிறார்கள்.
"பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரை" , "வடக்கிலிருந்து கிழக்கு நோக்கி" என்று சொல்லி தனது இனத்தின் உரிமையை வென்றேடுக்க மீண்டும் அகிம்சை வழிப் போராட்டங்களையும், பேரணிகளையும் ஆரம்பித்து விட்டான் தமிழன்.

இம்முறை சர்வதேசமும் கைகொடுக்கும் நிலையில் இல்லை, பெரும்பான்மை இன சிங்கள மக்களின் ஆதரவும் இலங்கை ஆட்சியாளர்களுக்கு இல்லை.
இனி என்ன செய்வார்கள்! தமிழன் மீண்டும் எழுகிறான்!