போராட்டத்தில் குதிக்கவுள்ள எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள்!
இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திற்கு (CPC) முன்பாக அமைதிப் போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் குறித்த போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளனர்.
இந்தநிலையில், நாளை (06) காலை 9:30 மணி முதல் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இது குறித்து எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.
விநியோக முறை
இதில், தற்போது நடைமுறையில் உள்ள ஒற்றை-இரட்டை (Odd-Even) எரிபொருள் விநியோக முறையினால் எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்கள் எதிர்கொள்ளும் பாரிய சிரமங்களே இந்தப் போராட்டத்திற்கு முதன்மையான காரணம் எனச் செயற்குழு உறுப்பினர் டி.வி. சாந்த சில்வா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், தற்போதைய இந்த நடைமுறை எரிபொருள் நிலைய நடத்துனர்களுக்கும் ஊழியர்களுக்கும் சொல்லொணா அசௌகரியத்தை ஏற்படுத்தியுள்ளதாக வலியுறுத்தியுள்ளார்.
அத்தோடு, எரிபொருள் விலை சூத்திரத்தின் கீழ் பெட்ரோலிய கூட்டுத்தாபனம் மற்றும் பிற நிறுவனங்களுக்கு ஆறு வீதச் செயல்பாட்டு லாப வரம்பு கிடைப்பதாகவும், எரிபொருள் நிலைய உரிமையாளர்களுக்கு முன்னதாக மூன்று வீத கமிஷன் ஒதுக்கப்பட்டிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
புதிய நிர்வாகம்
இருப்பினும், பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் புதிய நிர்வாகத்தால் இந்தக் கமிஷன் தற்போது குறைக்கப்பட்டுள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

கூடுதலாக, முன்பதிவு செய்யப்பட்ட (Order) டீசல் மற்றும் பெட்ரோல் விநியோகத்தில் ஏற்படும் தொடர்ச்சியான தாமதங்கள் மற்றும் விநியோகத்தில் நிலவும் முறையற்ற தன்மைகள் காரணமாக எரிபொருள் நிலையங்களைச் சீராக நடத்துவது சவாலாக மாறியுள்ளதாகச் சில்வா சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தப் போராட்டத்தின் விளைவாக எரிபொருள் விநியோகத்தில் பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்பதால் இது நுகர்வோர் மத்தியிலும் கவனத்தைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |