IMF-க்கு முற்றாக அடிபணிந்துள்ள அரசாங்கம்! ஜி.எல் பீரிஸ் சாடல்
சர்வதேச நாணய நிதியத்தின் கடுமையான நிபந்தனைகளுக்கு அரசாங்கம் முற்றாக அடிபணிந்துள்ளமையையே எரிபொருள் விலையேற்றத்துக்கான முக்கிய காரணம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு வழங்கிய 695 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியானது வெறுமனே வழங்கப்படவில்லை என்றும், எரிபொருள் மற்றும் மின்சாரக் கட்டணங்களை உயர்த்துவது போன்ற கடுமையான நிபந்தனைகளுக்கு அரசாங்கத்தை இணங்கச் செய்தே இந்த நிதித் தவணை விடுவிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பில் கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர்,
உலகளாவிய எரிபொருள் நெருக்கடி
வரும் செப்டெம்பர் மாதத்திற்கு முன்னர் எரிபொருள் உள்ளிட்ட அனைத்து மக்கள் மானியங்களையும் முழுமையாக ஒழிப்பதற்கு அரசாங்கம் உடன்பட்டுள்ளது. இதனால், நாட்டின் வாழ்க்கைச் செலவு மக்கள் மேலும் தாங்க முடியாத அளவிற்கு உயரும் என எச்சரிக்கின்றோம்.

உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியடையும் போது, பாகிஸ்தான் போன்ற நாடுகள் அதன் லாபத்தை மக்களுக்கு வழங்கி, எரிபொருள் விலையை 22 ரூபாயினால் குறைத்துள்ளன. ஆனால் எமது நாட்டில் நிலைமை முற்றிலும் தலைகீழாக உள்ளது.
ஏனைய நாடுகளின் தலைவர்கள் தற்போதைய உலகளாவிய நெருக்கடிகளின் போது தங்களது நாட்டு மக்களுடன் வெளிப்படையான கலந்துரையாடல்களில் ஈடுபட்டு, கூட்டுத் தீர்வுகளைக் காண்கின்றனர்.
ஜப்பான் பிரதமர், சிங்கப்பூர் அமைச்சர்கள் மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் இதற்காக எடுத்து வரும் நடைமுறைச் சாத்தியமான உத்திகளை நாம் உதாரணமாகக் கூறலாம்.
அவுஸ்திரேலியாவின் மூன்று மாநிலங்கள் தற்போதைய நிலைமையைக் கருத்திற்கொண்டு மக்களுக்கு இலவச பேருந்து மற்றும் தொடருந்து சேவைகளை வழங்கியுள்ள நிலையில், இலங்கை அரசாங்கம் மாத்திரம் மக்களை ஏமாற்றி, உண்மைகளை மறைக்கும் கொள்கையையே பின்பற்றி வருகின்றது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |