எரிபொருள் விலை உயர்வு தவிர்க்க முடியாது - கைவிரிக்கும் அரசு
உலகச் சந்தை நிலவரங்களுக்கு அமைவாக உள்நாட்டில் எரிபொருள் விலையை அதிகரிக்க வேண்டியது தவிர்க்க முடியாதது என்று வலுசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்தார்.
இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
எரிபொருள் விலை
அவர் மேலும் தெரிவிக்கையில், "தற்போது உலகச் சந்தையில் ஏற்பட்டுள்ள விலை மாற்றங்களுக்கு ஏற்ப உள்நாட்டிலும் எரிபொருள் விலையை அதிகரிக்காத பட்சத்தில், நாட்டின் எரிபொருள் விநியோகக் கட்டமைப்பு முழுமையாகப் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

எனினும், பொதுமக்கள் இது குறித்து அச்சமடையத் தேவையில்லை.
வருங்காலத்தில் உலகச் சந்தையில் எரிபொருளின் விலை குறைவடையும் பட்சத்தில், அதன் முழுமையான பயனை தங்குதடையின்றி நாட்டு மக்களுக்கு வழங்குவதற்கு அரசு நிச்சயம் நடவடிக்கை எடுக்கும் என்றார்.
இந்நிலையில், டீசல் விலை அதிகரிக்கப்பட்ட போதிலும், அதற்குச் சாதகமான முறையில் பேருந்துக் கட்டணங்கள் உயர்த்தப்படாமை குறித்து ஆராய்ந்து, தங்களது அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து இறுதித் தீர்மானம் எடுப்பதற்காக அனைத்துப் பேருந்து சங்கங்களின் பிரதிநிதிகளும் இன்று (02) காலை அவசரமாகக் கூடி ஆராயவுள்ளனர்.
நாட்டில் பணவீக்கம்
இதேவேளை மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தொடரும் மோதல்கள் மற்றும் எரிபொருள் விலை உயர்வு காரணமாக நாட்டில் பணவீக்கம் 7 சதவீதம் வரை உயரக்கூடும் என மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

குறுகிய காலத்தில் மத்திய கிழக்கு போர் தணியும் என கணிக்கப்பட்டிருந்தாலும், அதன் நீண்ட கால நீடிப்பு காரணமாக நாட்டின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நேற்று இரவு (01) தென்னிலங்கை தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சியில் பங்கேற்றபோது மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |