மீண்டும் களமிறங்கிய காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் - காணொளி
கொழும்பு - கொம்பணித் தெரு காவல் நிலையத்திற்கு முன்பாக இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர் அமைப்பினர் உள்ளிட்டவர்களை விடுதலை செய்யக் கோரியும், காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் காவல்துறையினரால் தொடர்ச்சியாக கைது செய்யப்படுவதற்கு எதிராகவும் இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அரசாங்கத்திற்கு எதிரான மக்களின் போராட்டத்தின் போது அதிபர் மாளிகை மற்றும் அலரி மாளிகையில் நுழைந்து பொதுச் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்திய குற்றச்சாட்டுக்களின் கீழ் காவல்துறையினரால் காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் அண்மைய நாட்களாக கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
இதன் அடிப்படையில் பலர் கைதாகியுள்ள நிலையில், ருவான் விஜயமுனி என்ற ஒரு நபர் கொழும்பு கொம்பணித் தெரு காவல் நிலையத்தில் இன்று முன்னிலையாகியுள்ளார்.
அரசாங்கத்தின் தொடர்ச்சியான அடக்குமுறை
இவர் அதிபர் மாளிகைக்குள் நுழைந்து பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்தவர் ஆவார்.
அத்துடன் இன்னும் பலர் கொழும்பு குற்றத் தடுப்பு விசாரணை பிரிவில் இன்று முன்னிலையாகியுள்ளனர்.
இவ்வாறான கைது மற்றும் விசாரணை நடவடிக்கைகளுக்கு எதிராகவே இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
தொடர் போராட்டங்கள்

அரசாங்கத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது அரசாங்கம் தொடர்ச்சியாக அடக்குமுறைகளை பிரயோகிப்பதற்கு எதிராகவும், காவல்துறையினரின் கைது நடவடிக்கைகளுக்கு எதிராகவும் கொழும்பில் காலிமுகத்திடல் போராட்டக்குழுவினரால் தொடர்ச்சியாக போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்தி
முடிவிற்கு வந்தது காலிமுகத்திடல் போராட்டம்

