யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு பொன்னகவைப் பெருவிழா
ஈழத் தமிழர்களின் தனிப்பெரும் அடையாளங்களில் ஒன்றாகத் திகழும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஸ்தாபிக்கப்பட்டு ஐம்பது ஆண்டுகளை நிறைவு செய்து, பொன்னகவைப் பெருவிழாவை கொண்டாடவுள்ளது.
இலங்கை பல்கலைக்கழகத்தின் யாழ்ப்பாண வளாகமாக 1974 ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் 06 ஆம் நாள் ஆரம்பிக்கப்பட்ட இவ் உயர்கல்வி நிலையம், இன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகமாக வியாபித்து நிற்கிறது.
விமரிசையாக கொண்டாடப்படவுள்ள பொன்விழா நிகழ்வு
ஐம்பதாவது ஆண்டைக் கடந்திருக்கும் இப்பல்கலைக்கழகத்தின் பன்னிரண்டு பீடங்களும் இணைந்து பொன்விழா நிகழ்வை எதிர்வரும் ஐப்பசி 06 ஆம் திகதி வெகு விமரிசையாகக் கொண்டாடுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
பல்கலைக்கழகத்தின் பொன் அகவையை ஒட்டி, இராமநாதன் மண்டபத்தையொட்டி விரிவாக்கம் செய்யப்பட்ட “கூடல் அவை” எனும் சபா மண்டபம் சம்பிரதாய பூர்வமாக சமய அனுட்டானங்களுடன் அன்றைய தினம் காலை 6.30 மணியளவில் - சுப நேரத்தில் திறந்து வைக்கப்படவுள்ளது.
தொடர்ந்து காலை 09.00 மணிக்கு ஆரம்பிக்கப்படவுள்ள பொன் விழா நிகழ்வுக்கு இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் கபில செனிவிரத்ன பிரதம விருந்தினராகக் கலந்து கொள்ளவுள்ளார்.
கலந்து சிறப்பிக்கவுள்ளோர்
வடக்கு மாகாண ஆளுநர்நா.வேதநாயகன், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உப தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் கே. எல். வசந்தகுமார சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
பல்கலைக்கழகத்தின் ஐம்பது வருடகால கல்விப் பணி வரலாற்றை எடுத்தியம்பும் வகையில் அமைந்த வரலாற்றுப் பொக்கிஷமான “யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பொன்அகவை வரலாறு” எனும் நூலும், பல்கலைக்கழகத்தின் பொன்னகவையை நினைவு கூரும் வகையிலான நினைவு முத்திரை வெளியீடும் இடம்பெறவுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
