மகிழ்ச்சித் தகவல் - யாழ்ப்பாணத்தில் இன்று முதல் கடவுச்சீட்டு அலுவலகம்
யாழ். மாவட்ட செயலக வளாகத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அலுவலகத்தினை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) திறந்து வைக்கவுள்ளார்.
வட மாகாண மக்கள் கடவுச்சீட்டை இலகுவாகப் பெற்றுக் கொள்ளும் வசதியை ஏற்படுத்தும் வகையில் யாழ்ப்பாணத்தில் புதிய குடிவரவு குடியகல்வு அலுவலகம் திறந்து வைக்கப்பட உள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதியாக அநுர பதவியேற்று ஒரு வருடம் பூர்த்தியாவதை முன்னிட்டு பல்வேறு செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. அவை வடக்கில் யாழ்ப்பாணத்தில் இருந்தே ஆரம்பிக்கப்படவுள்ளது.
மைதானத்திற்கான ஆரம்ப நடவடிக்கை
அந்தவகையில், யாழ்ப்பாணம் வருகை தரும் ஜனாதிபதி காலை 08.30 மணியளவில் மயிலிட்டி மீன்பிடி துறைமுக அபிவிருத்தி பணிகளை ஆரம்பித்து வைக்கவுள்ளார்.
யாழ் மாவட்ட செயலக வளாகத்தில் புதிதாக ஆரம்பிக்கப்படவுள்ள குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் யாழ். பிரதேச அலுவலகத்தினை இன்றைய தினம் (1.09.2025) திங்கட்கிழமை காலை 09.30 மணியளவில் திறந்து வைக்கவுள்ளார்.
அதனை தொடர்ந்து ஜனாதிபதி மண்டைதீவில் அமைக்கப்படவுள்ள சர்வதேச துடுப்பாட்ட மைதானத்திற்கான ஆரம்ப நடவடிக்கைகளை ஆரம்பித்து வைக்கவுள்ளார்.
அத்துடன் ஜனாதிபதி யாழ். பொது நூலகத்திற்கு விஜயம் செய்து நூலகத்தை பார்வையிடவுள்ளதுடன் சில நூல்களையும் அன்பளிப்பு செய்யவுள்ளார்.
இதேவேளை யாழ்ப்பாணத்திற்கு வருகை தரவுள்ள ஜனாதிபதி, செம்மணி மனித புதைகுழி அகழ்வு பணிகளையும் நேரில் பார்வையிட வாய்ப்புள்ளதாக கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் (Ramalingam Chandrasekar) அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
