சட்டத்தின் ஆட்சியை நலினப்படுத்துகிறார் கோட்டாபய - வெளிவந்தது கண்டன அறிக்கை
இலங்கையில் சட்டத்தின் ஆட்சியை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாளுக்கு நாள் நலினப்படுத்தி வருவதாக சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் குற்றஞ்சாட்டியுள்ளது.
பயங்கரவாத தடைச் சட்டத்தை அரசாங்கம் சிறுபான்மையினருக்கு எதிராக பயன்படுத்துகின்றமை தொடர்பில் கண்காணிப்பகத்தின் தெற்காசியாவிற்கான பணிப்பாளர் மீனாக்ஷி கங்குலி தமது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
இலங்கை அரசாங்கம் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களில் 16 பேரை பொது மன்னிப்பின் கீழ் விடுவித்துள்ளதை சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வரவேற்றுள்ளது.
எனினும் கொடூரமான பயங்கரவாத சட்டத்தை நீக்குவது தொடர்பில் அரசாங்கம் நடவடிக்கை எடுக்காமை குறித்து சர்வதேச மனித உரிமை கண்காணிப்பத்தின் தெற்காசியாவிற்கான பணிப்பாளர் மீனாக்ஷி கங்குலி தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.
பயங்கரவாத தடைச் சட்டத்தை சர்வதேச தரத்திற்கு ஏற்ற வகையில் திருத்தம் செய்து, மனித உரிமையை வலுப்படுத்தாதவிடத்து இலங்கைக்கு வழங்கும் வரிச் சலுகை தொடர்பில் மீள்பரிசீலனை செய்யப்படும் என ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றம் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளதையும் மீனாட்சி கங்குலி சுட்டிக்காட்டியுள்ளார்.
பௌத்தர்களின் புனித நாளான பொசன் போயா தினத்தில் 16 அரசியல் கைதிகளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விடுத்த போதிலும் பயங்கரவாத தடைச் சட்டமானது, சிறுபான்மை இனங்களான தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களை எதேச்சையாக கைது செய்து தடுத்து வைக்கவும், துன்புறுத்தல்களை மேற்கொண்டு வாக்குமூலங்களைப் பெற்றுக் கொள்வதற்கும் நீண்ட காலமாக பயன்படுத்தப்படுவதாக மீனாக்ஷி குற்றஞ்சாட்டியுள்ளார்.
கொலையாளியான தமது அரசியல் பங்காளி துமிந்த சில்வாவை ஜனாதிபதி விடுவித்த சம்பவமானது, இலங்கையில் சட்டத்தின் ஆட்சிக்கு தேவை ஏற்பட்டுள்ளதையும் சட்டத்தின் ஆட்சி நடைபெற வேண்டும் என்பதையும் வலியுறுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ராஜபக்ஷ அரசாங்கம் 2019 ஆம் ஆண்டு பதவிக்கு வந்ததலிருந்து சிறுபான்மை இனத்திற்கு எதிராக பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பயன்படுத்துவதாகவும், சிறுபான்மையினருக்கு எதிராக மேற்கொள்ளப்படும் வன்முறை மற்றும் பாரபட்சத்திற்கு எதிராக எந்தவொரு நடவடிக்கையினையும் அரசாங்கம் எடுக்கவில்லை எனவும் சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகத்தின் தெற்காசியாவிற்கான பணிப்பாளர் தமது அறிக்கையில் கோடிட்டுக் காட்டியுள்ளார்.
வடக்கு கிழக்கில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் இடம்பெறும் கைதுகள் அதிகரித்து வருவதாகவும் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் மனித உரிமை பாதுகாப்பாளர்கள், மற்றும் வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் மீது ராஜபக்ஷ அரசாங்கத்தின் படைத்தரப்பு துன்புறுத்தல்களை மேற்கொண்டுவருவதாகவும் மீனாட்சி கங்குலி குற்றஞ்சாட்டியுள்ளார்.
எனவே ஐரோப்பிய ஒன்றியம் ஐிஎஸ்பி வரிச்சலுகை வழங்கும் விடயத்தில் இலங்கையில் நடைமுறையில் இருக்கும் பயங்கரவாத தடைச் சட்டத்தை மாற்றி மனித உரிமைக்கான பொறுப்புகூறலை நடைமுறைப்படுத்துவதற்கான அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டும் எனவும் மீனாக்ஷி கங்குலி வலியுறுத்தியுள்ளார்.
மேலும் ஐக்கிய நாடுகள் சபை, அமெரிக்கா, மற்றும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஆகியன துமிந்த சில்வாவிற்கு வழங்கப்பட்ட விடுதலையை விமர்சித்துள்ளதுடன், இதன் மூலம் ஜனாதிபதி சட்டத்தை வலுவிழக்கச் செய்து நலிவடையச் செய்துள்ளார் என தெரிவித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே இலங்கையில் காத்திரமான சட்ட மறுசீரமைப்பை மேற்கொள்வதற்கும் தொடரும் துஷ்பிரயோகங்களை முடிவுறுத்துவதற்கும் சர்வதேச சமூகம் அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும் எனவும் சர்வதேச மனித உரிமை கண்காணிப்பத்தின் தெற்காசியாவிற்கான பணிப்பாளர் மீனாக்ஷி கங்குலி தமது அறிக்கையில் மேலும் வலியுறுத்தியுள்ளார்.