விடுதலைப் போராட்டத்தை குறைத்து மதிப்பிட்ட கோட்டாபய! சுமந்திரன் ஆவேசமான பதில்
சிறிலங்கா அரசாங்கம் வழங்கும் சில அடிப்படை வசதிகளுக்காக, கொள்கை மற்றும் மக்களின் நிலையான ஆணையை கைவிட முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் வசதிகளுக்காக போராடவில்லை எனவும் மாறாக, சுயநிர்ணய உரிமை, சுய சட்டங்களுக்கான உரிமை மற்றும் அதிகாரப் பரவலாக்கல் என்ற விடயங்களை முன்வைத்தே போராடியதாகவும், இவற்றை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் வகையில் அரச தலைவர் கருத்து வெளியிட்டுள்ளதாகவும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் (M. A. Sumanthiran) தெரிவித்துள்ளார்.
அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவினால் முன்வைக்கப்பட்ட அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் மீதான ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் பங்கேற்று உரையாற்றுகையில் அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.
இதன்போது மேலும் தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
“அரச தலைவரின் கவனக்குறைவான உரைக்கு ஒதுக்கப்பட்ட நேரம் அதிகம் என்பதே என்னுடைய நிலைப்பாடு. ஒரு சில முக்கிய விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டன. எனினும் அதற்கான தீர்வு குறித்து எவ்வித கருத்துக்களும் வெளியிடப்படவில்லை.
நாட்டின் பொருளாதாரம் மற்றும் நிதி நெருக்கடி குறித்து அடையாளம் கண்டிருந்தார். அந்தப் பிரச்சினையை நாமும் அறிவோம். எனினும் கடந்த பல அரசாங்கங்கள் நிரந்தர தீர்வு வழங்கத் தவறிய பிரச்சினையின் அதியுச்ச நிலையை நாம் எதிர்கொண்டுள்ளோம் என அரச தலைவர் குறிப்பிடுகின்றார்.
கடந்த அரசாங்கத்தை மாத்திரம் அவர் குறைகூறவில்லை. முன்னைய ராஜபக்ச அரசாங்கங்கத்தையும் அவர் குறைகூறுகின்றார். அவர் தனது சகோதரர் மீதுகூட குறை கூறுகின்றார். எனினும் எவ்வித தீர்வு திட்டங்களையோ, கொள்கை வழிகாட்டல்களையோ அவர் முன்வைக்கவில்லை. மக்களின் நம்பிக்கையை வெல்லக்கூடிய எந்தவொரு விடயத்தையும் அவர் முன்வைக்கவில்லை.
நாங்கள் பாத்திரத்தை வைத்துக்கொண்டு காத்திருக்கின்றோம். யாரோ ஒருவர் வந்து அடுத்த நேர உணவை வழங்குகின்றனர். நாட்டின் நிதி நிலைமை அவ்வாறுதான் காணப்படுகின்றது.
எதிர்காலத்தில் என்ன நடக்கும் என எவருக்கும் தெரியாது. எவ்வித பாகுபாடுமின்றி, அனைத்து மக்களுக்கும் வசதிகளை வழங்குவதே நல்லிணக்கத்திற்கான அரசாங்கத்தின் முதன்மையான பொறுப்பாக கருதப்படுகிறது என அரச தலைவர் தெரிவிக்கின்றார்.
இது வடக்கு கிழக்கு மக்களின் கண்ணியத்தை அவமானப்படுத்தியதாகவே நாம் பார்க்கின்றோம். அவர்கள் வசதிகளுக்காக போராடவில்லை. இந்த நாட்டில் சமமான குடிமக்களாக நடத்தப்படுவதற்கான உரிமையை கோரி நிற்கின்றார்கள். சுயநிர்ணய உரிமை, சுய சட்டங்களுக்கான உரிமை, அரசாங்கங்களுக்கு இடையிலான அதிகாரப் பரவலாக்கல் இவை அனைத்தையும் குறைத்துவிட்டு அடிப்படை வசதிகளே அவர்களுக்கு அவசியம் எனவும் அவர் குறிப்பிடுகின்றார். இதுதான் அவர் புரிந்துகொண்ட தேசியப் பிரச்சினை.
பல்வேறு அரசியல் நோக்கங்களை தற்காலிகமாக ஒதுக்கி வைத்துவிட்டு, அந்தந்தப் பகுதிகளில் உள்ள மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காக அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு, வடக்கு, கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களிடமும் கோரிக்கை விடுக்கின்றேன் என அரச தலைவர் குறிப்பிடுகின்றார்.
எங்கள் கட்சியின் கொள்கை மற்றும் ஆணை மக்களால் வழங்கப்பட்டது. இந்த நிலையான ஆணையை மக்கள் எமக்கு வழங்கியுள்ளனர். அதுவே அவர்களை காப்பாற்றியது. நாங்கள் எங்கள் மக்களின் குரல்களுக்கே செவி சாய்ப்போம். வேறு நபர்களின் குரல்களுக்கு அல்ல” என்றார்.