அரசாங்கத்தின் சர்வாதிகார அடக்குமுறை பொறிமுறை நாட்டை ஏகாதிபத்தியவாதிகளின் கைகளில் தள்ளியுள்ளது!
அரசாங்கத்தின் சர்வாதிகார அடக்குமுறை பொறிமுறையானது நாட்டை ஏகாதிபத்தியவாதிகளின் கைகளில் தள்ளியுள்ளதாகவும், ஸ்ரீலங்காவில் மனித உரிமைகளைப் பாதுகாப்பதன் மூலம் ஜெனீவாத் தீர்மானத்தை தோற்கடிக்க முடியுமெனவும் மக்கள் விடுதலை முன்னணி, குற்றஞ்சாட்டியுள்ளது.
ஆட்சி அதிகாரத்திற்காக இனவெறி மற்றும் மத வெறியை பேணுவதன் மூலம் ஒரு சர்வாதிகார ஆட்சியை செயற்படுத்த கோட்டாபய ராஜபக்ச அரசாங்கம் முயற்சிப்பதாகவும், இந்த நோக்கத்தை அடைவதற்காக மனித உரிமைகள் மீறப்படுவதோடு, நீதித்துறை அழிவுக்குள்ளாவதாகவும் அந்த கட்சியின் தேசிய அமைப்பாளர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இராஜகிரியவில் அமைந்துள்ள, கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பங்கேற்று கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், ஐக்கிய நாடுகள் சபையில் ஏகாதிபத்திய நாடுகள் உள்ளன. இந்த அமைப்புகள் அவற்றின் பல்வேறு நோக்கங்களை அடைய முயற்சிக்கின்றன என்பதை ஒரு இடதுசாரி அரசியல் கட்சியாக நாம் நன்கு அறிவோம்.
இந்த அமைப்புகளில் ஏராளமான சுதந்திர மற்றும் இறையாண்மை கொண்ட நாடுகள் உள்ளன. ஏகாதிபத்திய நாடுகள் ஐக்கிய நாடுகள் சபையை அந்தந்த நாடுகள் தமது கிளையாக மாற்ற முடியாது. ஜெனீவாவில் ஸ்ரீலங்கா பாதுகாப்பாக இருக்க வேண்டுமென்றால் இதை புரிந்து கொள்ள வேண்டும். இலங்கை உலகில் தனிமைப்படுத்தப்படாமல் உலகுடன் இணைந்து செயற்பட வேண்டும்.
அதனை செயற்படுத்திக்காட்ட வேண்டியது அரச தலைவரின் பொறுப்பு. இந்த தாய் நாட்டிற்கு சர்வதேச பலம் தேவை. சர்வதேச உறவுகள் தேவை. இருப்பினும், கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சி அதிகாரத்திற்காக இனவெறி மற்றும் மத வெறித்தனத்தை பேணுவதன் மூலம் ஒரு சர்வாதிகார ஆட்சியை செயற்படுத்த முயற்சிக்கின்றனர்.
மனித உரிமைகளை மீறுவதன் மூலமும், நீதித்துறையை அழிப்பதன் மூலமும், ஜெனீவாவில் ஏகாதிபத்தியவாதிகளின் வாக்குகள் இல்லாமல் நாம் வெற்றிபெற முடியும்.
நாம் மனித உரிமைகளைப் பாதுகாத்தால் சுதந்திரமான இறையாண்மை கொண்ட நாடுகளில் வாக்குகளைப் பெற முடியும். இன்றும் கூட இலங்கைக்கு ஆதரவாக வாக்களிக்கும் சில நாடுகள் அமெரிக்காவின் தீர்மானம் என்பதாலேயே ஒத்துழைப்பு வழங்குகின்றன.
ஸ்ரீலங்காவில் மனித உரிமைகளைப் பாதுகாப்பதன் மூலம் இந்தத் தீர்மானத்தை தோற்கடிக்க முடியும். ஜெனீவாவை வெற்றிகொள்ளும் வாய்ப்பு இருக்கும்போது, இந்த அரசாங்கத்தின் சர்வாதிகார அடக்குமுறை பொறிமுறையானது நம்மை ஏகாதிபத்தியவாதிகளின் கைகளில் தள்ளியுள்ளது.
இலங்கையின் முஸ்லிம் மக்கள் மீது பிரயோகிக்கப்பட்ட அழுத்தம் காரணமாக, அமெரிக்காவிற்கு எதிரான முஸ்லிம் நாடுகள் கூட இலங்கைக்கு எதிராக வாக்களிக்கக்கூடும்.
வெளிநாடுகளுக்கு எப்போதும் சார்புடையவர்களாகவே இருக்கும் இரட்டை பிரஜாவுரிமையை கொண்டுள்ள நாட்டின் தலைவர்கள், ஜெனீவா பிரச்சினையின்போது மாத்திரம் எதிர்ப்பாளர்களாக மாறுவதாக சுட்டிக்காட்டினார். அத்துடன் கோட்டாபய ராஜபக்ச, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட சந்தர்ப்பத்தில் இரட்டை பிரஜாவுரிமையை கொண்டிருந்தார். ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் அவர் அதனை இரத்து செய்திருக்கவில்லை என்பதே எமது நம்பிக்கை அவரது மனைவியும் மகனும் இன்னும் அமெரிக்க பிரஜைகளே. அவர்களின் தலைவர் பசில் ராஜபக் இன்னும் அமெரிக்க பிரஜையாகவே இருக்கின்றார்.
இலங்கையின் அரசியலமைப்புக் கூட அதற்கு ஏற்றவாறு மாற்றப்பட்டது. வெளிநாடுகளுக்கு எப்போதும் சார்புடையவர்களாகவே இருக்கும் இரட்டை பிரஜாவுரிமையை கொண்டுள்ள, இரட்டை கடவுச் சீட்டுக்களை கொண்டுள்ள இவர்கள், ஜெனீவா பிரச்சினை வரும்போது மாத்திரம், எதிர்ப்பாளர்களாக, ஐக்கிய நாடுகள் சபையை எதிர்க்கும் தரப்பாக மாறுகின்றனர்.
தற்போதைய தீர்மானத்திற்கு முன்னரான தீர்மானத்தில் 2009 ஆம் ஆண்டு யுத்தம் தொடர்பான பிரச்சினைகள் இருந்தன. இன்று, 12 வருடங்களுக்குப் பின்னர் பெரும்பாலான விடயங்கள் போருக்குப் பின்னரான காலத்தைப் பற்றியவை.
ஜனநாயக விரோதம், நீதித்துறையின் சுதந்திரத்தில் தலையிடுவது போன்றவை. இது முற்றிலும் போர் தொடர்பான தீர்மானம் அல்ல என்பதை வலியுறுத்த வேண்டும். இதுவரை ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுக்களின் அனைத்து அறிக்கைகளையும் ஆராய தனி ஆணைக்குழு ஜனவரி 12ஆம் திகதி நியமிக்கப்பட்டது.
ஆணைக்குழுக்கள் பற்றி ஆராய ஒரு ஆணைக்குழு. ஜெனீவாவுக்குச் சென்று ஏதாவது ஒன்றை தெரிவிக்க வேண்டும் என்பதற்காகவே இந்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டது எனவும் தெரிவித்துள்ளார்.