கௌதம புத்தரை துணைக்கு அழைத்த கோட்டாபய! சுதந்திர தின உரையில் பகிரங்கமாக வெளிப்பட்ட பல தகவல்கள்
இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தான், இலங்கையை அல்ல, சிங்கள பெளத்த இராஜ்ஜியத்தையே கட்டியெழுப்ப புறப்பட்டுள்ளதாக என தெளிவுபட கூறி விட்டார்.
இதற்காக அவர், கெளதம புத்தரையும் துணைக்கு அழைத்து, தன்னை நியாயப்படுத்தியுள்ளார் என கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் இன்றைய சுதந்திரன தின உரையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ஜனாதிபதி கோட்டாபயவின் இன்றைய சுதந்திர தின உரையின் பிரதான சாராம்சத்தை கேட்டு பார்த்தால் இது தெளிவாக புரிகிறது.
தேடிப்பார்த்ததில் அவரது சிந்தனையில் உள்ள நான்கு முத்தான விடயங்களை தனது உரையில் அவர் உதிர்த்துள்ளார் என தெரிய வருகிறது.
நாம் பல இன, மொழி, மத மக்கள் சகவாழ்வு வாழும் சுபீட்சமான இலங்கை ராஜ்ஜியத்தை கட்டி எழுப்ப முயல்கிறோம்.
ஜனாதிபதி, தான் இலங்கையை அல்ல, சிங்கள பெளத்த இராஜ்ஜியத்தையே தான் கட்டியெழுப்ப புறப்பட்டுள்ளதாக என தெளிவுபட கூறிவிட்டார்.
உண்மையில் தனது இலக்கை, ஒளிவு மறைவு இல்லாமல் தெளிவாக, உள்ளதை உள்ளபடி கூறியமையையிட்டு நான் ஜனாதிபதியை பாராட்டுகிறேன்.
அவரது இலக்கை நாம் ஏற்க மறுக்கிறோம் என்பது வேறு விஷயம். ஆனால், அவர் ஒளிந்து விளையாடவில்லை அல்லவா? உலகத்துக்கு ஜனாதிபதி ஏதோ சொல்ல வருகிறார், அது என்ன என குழப்பிக்கொள்ள வேண்டாம்.
அவர் பின்வரும் நான்கு கருத்துகளைதான் தெளிவாக கூறுகிறார். 1. நீங்கள் தேடிய தலைவன் நான்தான். 2. நான் ஒரு சிங்கள பெளத்த தலைவன்.
இதை சொல்ல நான் ஒருபோதும் தயங்க போவதில்லை
3. பெளத்த படிப்பினைகளின் அடிப்படைகளிலேயே நான் இந்நாட்டை ஆளுவேன்.
4. நாட்டின் சட்ட வரையறைக்குள் எல்லா இன, மதத்தவருக்கும், சுதந்திரமும், சமத்துவமும் பெற்று சமாதான சகவாழ்வு வாழ பெளத்த தத்துவத்துக்குள்ளே உரிமையுண்டு
என்று குறிப்பிடப்பிட்டுப் பேசியுள்ளார்.