ஐநாவில் இலங்கைக்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டுக்கள்! தீவிர முயற்சியில் இறங்கிய கோட்டாபய அரசாங்கம்
ஜெனிவா மனித உரிமைச் சபையின் சபை அமர்வுகள் நடைபெறவுள்ள நிலையில் முன்னெப்பொழுதும் இல்லாத அளவுக்கு ராஜபக்ச அரசாங்கத்துக்கு எதிரான கருத்துக்கள் சர்வதேச மட்டத்தில் வலுப்பெற்று வருகின்றன. இதனால் மனித உரிமைச் சபையின் அங்கத்துவ நாடுகளின் ஆதரவை பெறும் முயற்சியில் ராஜபக்ச அரசாங்கத்தின் உயர்மட்ட இராஜதந்திரிகள் ஈடுபட்டு வருவதாக கொழும்பு அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
மைத்தி - ரணில் அரசாங்கம் 2015 ஆம் ஆண்டு ஜ.நா மனித உரிமைச் சபையின் அங்கத்துவ நாடுகளுடனும் சுமூகமான இராஜதந்திர உறவைக் கடைபிடித்ததுடன் மனித உரிமைகள் தொடர்பான 30 / 1 தீர்மானத்துக்கும் ஆதரவும் வழங்கியிருந்தது. எனினும் அதன் பின்னர் ஆட்சிக்கு வந்த ராஜபக்ச அரசாங்கம் மேற்குலக நாடுகளுடன் மோதல் போக்கை கடைபிடிக்கும் அதேநேரம் சீனாவுக்கு அதிகளவு முக்கியத்துவத்தையும் கொடுத்து வருகின்றது. அதனால் மைத்திரி- ரணில் அரசாங்கம் மனித உரிமைச் சபையின் தீர்மானத்துக்கு வழங்கிய இணை அனுசரனையில் இருந்தும் முற்றாக விலகிக் கொள்வதாகவும் ராஜபக்ச அரசாங்கம் அறிவித்திருந்தது.
இவ்வாறான நிலையில் ஜக்கிய நாடுகள் மனித உரிமைச் சபை ஆணையாளர் மிச்செல் பச்லெட் இலங்கை தொடர்பாக இறுக்கமான பரிந்துரை ஒன்றை உறுப்பு நாடுகளிடம் வழங்கியுள்ளார். அந்தப் பரிந்துரையின் பிரதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. இதனால் எதிர்வரும் மார்ச் மாதம் கூடவுள்ள மனித உரிமைச் சபை அமர்வில் ராஜபக்ச அரசாங்கத்துக்கு மேலும் கடுமையான அழுத்தங்கள் பிரரயோகிக்கப்படலாமென எதிர்பார்க்கப்படுகின்றது. இதனால் ராஜபக்ச அரசாங்கம் மனித உரிமைச் சபையின் உறுப்பு நாடுகளின் ஆதரவைப் பெறும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது.
எனினும் ஊடகங்களில் வெளி வருவது போன்று பாரிய முரண்பாடுகள் எதுவும் இல்லையெனவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கட்சியின் பொதுச் செயலாளர் சாகரகாரியவசம் கருத்து தெரிவித்துள்ளார். ஜெனிவா விவகாரம் தொடர்பான கருத்தை கையாள்வதற்கான பொறுப்பை தினேஸ் குணவர்த்தனவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கருத்துக்கள் வெளி வந்துள்ளன. இதனை மேலும் வலுப்படுத்தும் நோக்குடன் அமெரிக்க இந்திய அரசுகளோடு உறவுகளை மேலும் பலப்படுத்தும் முயற்சியில் ஸ்ரீலங்கா இராஜதந்திரிகள் ஈடுபட்டுள்ளதாகக் கொழும்பில்இருந்து வெளிவரும் சிங்கள ஆங்கில நாடுகள் கூறுகின்றன.
இலங்கையின் துறைமுகத்தின் மேற்குமுனை அபிவிருத்தியையாவது அவசர இந்தியாவுக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றதாக அமைச்சரவைத் தகவல்கள் கூறுகின்றன.
you may like this