சிறிலங்காதீஸ்வர பத்ம விபூசணர் கோட்டாபாய இரண்டு தினங்களுக்கு முன்னர் விடுத்த சூளுரை
சிறிலங்காவின் அரச தலைவர் கோட்டாபாய ராஜபக்சவுக்கு ஏற்கனவே ‘ரேமினேற்றர்’ போன்ற அடைமொழிகள் இருந்தாலும் கடந்த ஞாயிற்றுக் கிழைமை முதல் அவருக்கு ‘சிறிலங்காதீஸ்வர பத்ம விபூசணர்’ என்ற விருது ஒட்டிக்கொண்டுவிட்டது.
கோட்டே சிறிகல்யாணி சாமகிரி தர்ம மகா சங்க சபையில் உள்ள பௌத்த தேரர்கள் இந்த கௌரவப் பட்டத்தை அவருக்கு வழங்கியபோது கோட்டாபாயவின் கடந்த கால மற்றும் சமகால பணிகளை கருத்திற் கொண்டு இந்த மதிப்பளிப்பை செய்வதாக குறிப்பிட்டுக்கொண்டார்கள்.
இந்த விருதை பெற்றுக்கொண்டு பதிலுரை வழங்கிய அவர் சிறிலங்காவின் இராணுவ அதிகாரியாகவும் பாதுகாப்புச்செயலாளராகவும் தான் நாட்டுக்கு ஆற்றிய சேவையைப் பாராட்டி இந்த விருது வழங்கப்பட்டதாக கூறியவர் தனது இருபது வருடகால இராணுவச் சேவைக்காலத்தின் போது, ஈழப்போரின் ஆரம்ப காலத்திலும் இரண்டாம் ஈழப்போரின் போதும், தமிழர் தாயகபகுதிகளில் தான் போர்புபுரிந்தாக பெருமை பாராட்டியிருந்தார்.
நான் அப்படிச் செய்தேன் இப்படிச்செய்தேன் அதற்காக ஏற்கனவே ‘ரணசூர்’ ‘ரணவிக்ரம’ பதக்கங்களையும் ஜனாதிபதி விருதுகளையும் தான் பெற்றதாகவும் தனது உரையில் அவர் குறிப்பிட மறக்கவில்லை.
ஆனால் கோட்டாபாயவுக்கு 'சிறிலங்காதீஸ்வர பத்ம விபூசணர்' என்ற விருது வழங்கப்பட்ட அதே நாளில்தான் ‘றிங்கோ 5 மேடர்ஸ்’ (Trinco 5 murders) என அனைத்துலக அரகில் பதிவுபெற்ற பச்சைக்குருதி படுகொலைகளின் 16 வது நினைவு தினம் பதிவாகியிருந்தது.
2006 இல் அதுவும் மோதல் தவிர்ப்பு நிலை இருந்தபோது திருகோணமலை கடற்கரைக்கு முன்பாக மரணதண்டனை பாணியில் சுட்டுக்கொல்லப்பட்ட இந்த 5 அப்பாவி மாணவர்களுக்கு இன்றுவரை நீதிகிட்டவில்லை.
கோட்டாவுக்கு விருது வழங்கப்பட்ட அன்றைய தினமும் திருமலை கடற்கரைக்கு முன்பாக உள்ள காந்தி சிலை சுற்று வட்டத்தில் அஞ்சலிகள் செய்யப்பட்டன.
இந்த பச்சைக்குருதி படுகொலையை செய்த சந்தேகத்தில் சிறிலங்கா அதிரடிப்படை கைது செய்யப்பட்டிருந்தாலும் வழமைபோலவே போதிய சாட்சியங்கள் இல்லை என அவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டிருந்தனர்.
இந்த பச்சைக்குருதி படுகொலை ஏற்கனவே ஐ.நா மனித உரிமை பேரவை உட்பட்ட அனைத்துலக அரங்கில் எதிரொலித்தாலும் இன்றுவரை நீதி கிட்டி குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை.
ஆனால் மறுபுறத்தே அந்த காலகட்டத்தில் சிறிலங்காவின் பாதுகாப்பு செயலாளராக இருந்த அதே முகத்துக்கு, அந்த படுகொலை நாளில் பௌத்த தலைகள் ‘சிறிலங்காதீஸ்வர பத்ம விபூசணர்’ என்ற விருமை வழங்கி அழகு பார்த்துள்ளார்கள்.
என்னே முரண்நிலை இது!!
இந்த விருதை பெற்றுக்கொண்ட கோட்டாபாய, 'தான் பெரும்பான்மை சிங்கள மக்களால் தெரிவு செய்யப்பட்ட தலைவர் என்பதை, ருவன்வெலி மஹா சேயவுக்கு முன்பாக ஜனாதிபதியாகப் பதவிப்பிரமாணம் செய்துகொண்டபோது அறிவித்த தனக்கு சிங்கள பௌத்தர்களையும் அவர்களின் பாரம்பரியத்தையும் பாதுகாக்கும் பொறுப்பு உறுதி ஏற்பதாக கூறியிருந்தார்.
தான் அரசதலைவராக பதவியேற்பதற்கு முன்னர், கூரகல புண்ணிய பூமி, மு{ஹது மஹா விகாரை, தீகவாபி புண்ணிய பூமி போன்ற பௌத்த விஹாரைகளுக்குரிய காணிகளின் நிலைமை எப்படி இருந்தது என குறிப்பிட்டவர் தப்போது அந்த விஹாரைகளின் காணிகள் மீட்கப்பட்டமை குறித்து பௌத்தர்கள் மகிழ்ச்சியடைய முடியும் எனக்குறிப்பிடடார்.
அதாவது தமிழ்பேசும் மக்களின் பூர்வீக இடங்களில் இடம்பெறும் பௌத்த ஆக்கிரமிப்புகளின் பிரதான ஆழி அதாவது ‘சுவிச்’ தன்னிடம் இருப்பதை அவர் பெருமையாகவே குறிப்பிட்டுள்ளார்.
தற்போது நாட்டின் பொருளாதார மற்றும் சமூக அசௌகரியங்கள் காரணமாக ஒருசிலர் தன்னை அவமானப்படுத்தினாலும் அதனைத் தாங்கும் சக்தி தன்னிடம் உள்ளதாக குறிப்பிட்டார்.
இனிமேலும் கடுமையான முடிவுகளை எடுப்பதற்குத் தான் தயாராகவே இருப்பதாக பௌத்ததலைகளுக்கு முன்னால் அன்றையதினம் சூளுரைத்தார் சிறிலங்காதீஸ்வர பத்ம விபூசணர் கோட்டாபாய ராஜபக்ச.
அதனை அவர் இன்றையதினம் செய்தும் காட்டியுள்ளார்.அதாவது தனது அமைச்சரவையில் இராஜாங்க அமைச்சுப்பதவியை வகித்த சுசில் பிரேமஜயந்தவை அவருக்குத் தெரியாமலேயே அமைச்சுப்பதவியிலிருந்து தூக்கி வீசியுள்ளார்.