யாழில் புலம்பெயர்ந்தவரால் அபகரிக்கப்பட்ட அரச காணி : விடுக்கப்பட்ட அதிரடி உத்தரவு
யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு குடத்தனைப் பகுதியில் அரச காணியை அபகரித்து முன்னெடுக்கப்பட்ட சட்டவிரோத கட்டுமானங்களுக்கு எதிராக, வடமராட்சி கிழக்கு பிரதேச செயலாளர் கடும் நடவடிக்கை எடுத்துள்ளார். ஒரு மாத கால அவகாசத்திற்குள் குறித்த காணியை விட்டு வெளியேறுமாறு உத்தியோகபூர்வமாக அறிவித்தல் ஒட்டப்பட்டுள்ளது.
புலம் பெயர் தேசம் ஒன்றில் வசிக்கும் நபர் ஒருவர், குடத்தனைப் பகுதியில் உள்ள அரச காணியைத் தனது சொந்தக் காணி என உரிமை கோரி, எல்லை மதில் அமைத்து சட்டவிரோதக் கட்டுமானங்களை மேற்கொண்டுள்ளார். இது குறித்து அவதானித்த ஊர் மக்கள் மற்றும் பொது அமைப்புகள், அரச காணிகளைப் பாதுகாக்கும் நோக்கில் பல்வேறு போராட்டங்களையும் எதிர்ப்பு நடவடிக்கைகளையும் முன்னெடுத்தனர்.
பிரதேச சபையின் அறிவித்தல் உதாசீனம்
இதனைத் தொடர்ந்து, பருத்தித்துறை பிரதேச சபையினால் குறித்த கட்டிடத்திற்கு எதிராக 'சிவப்பு எச்சரிக்கை' கடிதம் ஒட்டப்பட்டது. இருப்பினும், சட்டத்தை மதிக்காத போலி காணி உரிமையாளர் அந்த அறிவித்தலைக் கிழித்தெறிந்து சர்ச்சையை அதிகப்படுத்தினார்.

தற்போது நிலவும் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், வடமராட்சி கிழக்கு பிரதேச செயலாளர் உஷா சுபலிங்கம், 1979 ஆம் ஆண்டின் 7ம் இலக்க அரசு காணிகள் (ஆட்சி மீளப் பெறுதல்) சட்டத்தின் கீழ் நேரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளார்.
மக்கள் வரவேற்பு
அரசு காணிகள் தனிநபரால் அபகரிக்கப்படுவதை தடுத்து நிறுத்தும் நோக்கில் பிரதேச செயலகம் எடுத்துள்ள இந்த அதிரடி நடவடிக்கை குடத்தனை மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. சட்டவிரோதக் கட்டுமானங்களை அகற்றி, பொதுச் சொத்தை மீட்க அதிகாரிகள் எடுத்துள்ள இந்தத் தீர்மானம் சமூக ஆர்வலர்களால் பாராட்டப்பட்டு வருகின்றது.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
முகமாலை நவீன போரியல் விதிகளை மாற்றியமைத்த ஈழத்து ஸ்டாலின்கிராட் 9 மணி நேரம் முன்