அரசாங்கம் தற்போது குற்றவாளிகளாக செயற்படுகின்றது - ஐக்கிய மக்கள் சக்தி
அண்மையில் விநியோகிக்கப்பட்டு பின்னர் தடை விதிக்கப்பட்ட 18 லீற்றர் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு என்ன ஆயிற்று என்றும் அவற்றில் மேலும் 3 கிலோ எரிவாயு மீள் நிரப்பப்பட்டு சந்தைகளுக்கு விநியோகிக்கப்படுகின்றனவா? என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் ( Mujibur Rohman) கேள்வியெழுப்பியுள்ளார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மேற்கண்டவாறு கேள்வியெழுப்பியுள்ளார்.
அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில் ,
நாட்டில் பதிவாகிக் கொண்டிருக்கும் சமையல் எரிவாயு சிலிண்டரை அண்மித்த வெடிப்பு சம்பவங்களுக்காக வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன பதவி விலகியிருக்க வேண்டும்.
தொடர்ந்தும் இவ்வாறான வெடிப்பு சம்பவங்கள் பதிவாகிக் கொண்டிருக்கின்ற போதிலும் , அது தொடர்பான விசாரணைகளை அரசாங்கம் ஏன் குற்ற விசாரணைப் பிரிவிடம் ஒப்படைக்கவில்லை? எனவே இவை தொடர்பான விசாரணைகளை குற்ற புலனாய்வு திணைக்களத்திற்கு ஒப்படைத்து சட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
அவ்வாறு செய்தால் இந்த குற்றத்தை செய்யத் தூண்டிய அரசியல்வாதிகளின் பெயர்கள் வெளிப்படுத்தப்பட்டு விடும் என்ற அச்சத்தின் காரணமாகவா அரசாங்கம் தயங்குகிறது? இவ்வாறான சூழலில் அரசதலைவரால் எவ்வாறு சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்த முடியும்.
கனவில் மாத்திரமே அரசதலைவரால் அதனை செய்ய முடியும். லிட்ரோ சமையல் எரிவாயு நிறுவனம் நிதி அமைச்சின் கீழ் காணப்படுவதாலா அந்நிறுவனத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படாமலுள்ளது?
அவ்வாறெனில் அரசாங்கமே தற்போது குற்றவாளிகளைப் போன்று செயற்பட்டுக் கொண்டிருக்கிறது. காரணம் லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாகசபை உறுப்பினர்கள் நிதி அமைச்சினாலேயே நியமிக்கப்படுகின்றனர்.
அதன் காரணமாகவா இந்த அதிகாரிகளும் லிட்ரோ நிறுவனமும் பாதுகாப்படுகிறது? உண்மையில் தற்போது அரசாங்கத்தின் தேவை இவர்களைப் பாதுகாப்பதா? அரசாங்கத்தின் உண்மையான முகம் வெளிப்படுத்தப்படும் என்ற அச்சத்தின் காரணமாகவா சட்டம் நடைமுறைப்படுத்தப்படாமல் உள்ளது என மேலும் தெரிவித்துள்ளார்.