கொரோனாவினால் உயிரிழந்த முஸ்லிம்களின் சடலங்களை அடக்கம் செய்ய தனித் தீவினைத் தேடும் அரசாங்கம்!
கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்த முஸ்லிம்களின் உடல்களை நல்லடக்கம் செய்ய சூனியப் பிரதேசமான தீவு ஒன்றை தெரிவுசெய்ய கொவிட் -19 செயலணிக்கூட்டத்தில் தீர்மானித்துள்ளது. அதேநேரம் நல்லடக்க வழிமுறைகள் உள்ளடங்கிய வழிகாட்டி அறிக்கையை இந்த வாரம் இறுதிக்குள் வெளியிடவும் சுகாதார பணியகம் தீர்மானித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழக்கும் முஸ்லிம்களில் உடல்களை நல்லடக்கம் செய்ய அனுமதிக்கக்கோரி தொடர்ச்சியாக முஸ்லிம் தரப்பினர் வலியுறுத்தி வந்த நிலையில் சர்வதேச அழுத்தங்கள் மற்றும் தேசிய அழுத்தங்கள் காரணமாக தற்போது உடல்களை நல்லடக்கம் செய்ய அனுமதிப்பதாக சுகாதார தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
எனினும் நல்லடக்கம் செய்ய முன்னர் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்தும், பொது இடங்களில் அல்லது பொது மயானங்களில் நல்லடக்கம் செய்ய அனுமதிக்க முடியுமா என்பது குறித்து கொரோனா செயலணிக் கூட்டத்தில் ஆராயப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் சுகாதார தரப்பின் தீர்மானம் என்ன என்பது குறித்து பிரதி சுகாதார பணிப்பாளர் ஹேமந்த ஹேரத்தகவல் வழங்கும் போதே அவர் இந்த விடயத்தினைத் குறிப்பிட்டுள்ளார்.