வாகனங்களின் விலையைக் குறைக்க வேண்டும் : அரசிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
சாதாரண மக்கள் பயன்படுத்தும் சிறிய ரக வாகனங்களின் விலையைக் குறைக்க அரசாங்கம் அவதானம் செலுத்த வேண்டும் என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் பிரசாத் மானகே தெரிவித்துள்ளார்.
அத்துடன் குறைந்த இயந்திர கொள்ளளவு கொண்ட வாகனங்களின் விலையில் மாற்றத்தை ஏற்படுத்துமாறு அவர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், "சாதாரண பொதுமக்கள் கொள்வனவு செய்யும் Alto, Wagon R, Yaris, Hustler போன்ற 1000cc வரம்பிற்குட்பட்ட வாகனங்களுக்கான வரியைக் குறைத்து வழங்குங்கள்.
பொருளாதார மட்டம் வீழ்ச்சி
ஒரு சாதாரண Wagon R வாகனத்திற்கு சுமார் 40 இலட்சம் ரூபாய் வரி விதிக்கப்படுகிறது. நடுத்தர வர்க்கத்தினரே இதனை வாங்குகிறார்கள். அத்துடன் இது சிறந்த எரிபொருள் சிக்கனம் கொண்ட வாகனம். உண்மையில் இவ்வாறான வாகனங்களையே ஊக்குவிக்க வேண்டும்.

இதேவேளை, நாட்டில் நிலவிய அனர்த்த நிலைமை காரணமாக வாகன விற்பனையில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. எனவே இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கான நிபந்தனைகளை அரசாங்கம் தளர்த்த வேண்டும்.
அனர்த்த நிலைமையால் மக்களின் பொருளாதார மட்டம் வீழ்ச்சியடைந்துள்ளது. முன்பதிவு செய்தவர்களால் வாகனங்களை வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மூன்று மாதங்கள் கடந்தவுடன் 3 சதவீதம் அபராதம் விதிக்கப்படுகிறது.
எனவே, நிலவும் அனர்த்த நிலைமையைக் கருத்திற்கொண்டு, முடிந்தால் இந்த 3 சதவீத அபராதத்தை நீக்கித் தருமாறு அரசாங்கத்திடம் கோருகிறோம்" என அவர் மேலும் தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |