இனவாதத்தால் மக்களை ஆயுததாரிகளாக்கும் அரசாங்கம்! - எதிர்க்கட்சித் தலைவர் விடுத்துள்ள கோரிக்கை (படங்கள்)
அரசாங்கம் இனவாதத்தால் மக்களை ஆயுததாரிகளாக்கும் நிலைமைக்குத் தள்ளியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.
விரைவில் வழங்கப்பட வேண்டிய கடன் தவணையை மீளச் செலுத்துவதற்கு முன்னர் மக்களை வாழ வைக்க அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
முல்லைத்தீவில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
500 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை விரைவில் செலுத்த வேண்டும். எதையும் செய்வதற்கு முன்னும் மக்கள் வாழ வேண்டும் என்பதை நான் அரசாங்கத்திற்கு கூற விரும்புகிறேன்.
மக்களுக்கு உணவு, மருந்து, எரிபொருள் வழங்குவது இந்த அரசாங்கத்தின் பொறுப்பாகும்.எரிபொருளை இழந்தால் நாட்டின் தொழில் அமைப்பும் சமூக அமைப்பும் சீரழியும்.
இப்பிரச்சினைக்கு தீர்வு காண அரசாங்கத்திடம் திட்டம் உள்ளதா? நாட்டின் பொருளாதாரப் பிரச்சினைகள், டொலர் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் அரசாங்கத்திற்கு திறன் இல்லை, இனங்கள், மதங்களுக்கும் இடையில் வெறுப்புணர்வை பரப்பி அசாதாரண சூழ்நிலையை உருவாக்குவதுதான் அரசாங்கம் மேற்கொண்டு வரும் செயலாகும்.
அரசாங்கம் அவ்வாறு செயற்படும் வேளையில், ஐக்கிய மக்கள் சக்தி மருத்துவமனைகளுக்கு மூச்சைக் கொண்டு வந்து நாட்டு மக்களின் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றது.
மறுபுறம், தகவல் தொழில்நுட்ப புரட்சி திட்டம் திட்டத்தை பாடசாலை கட்டமைப்புக்கு கொண்டு வந்து நவீன கல்வி, கணினி கல்வியறிவு, தகவல் தொடர்பு கல்வியறிவு ஆகியவற்றை ஊக்குவிக்கும் வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துகிறது.
அரசாங்கம் இனவாதத்தால் மக்களை ஆயுததாரிகளாக்கும் அதேவேளையில், நல்ல சுகாதாரத் திட்டங்களையும், நல்ல கல்வித் திட்டங்களையும் ஐக்கிய மக்கள் சக்தியாக நாங்கள் மக்களுக்கு வழங்குகிறோம். இதுதான் அரசாங்கத்திற்கும் ஐக்கிய மக்கள் சக்திக்கும் உள்ள வித்தியாசம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


