பளையில் விடுதலைப் புலிகளின் முகாம்..! சர்ச்சைக்குரிய காணொளிகள்: அடியோடு மறுக்கும் அரசாங்கம்
பளை பகுதிக்குள் விடுதலைப் புலிகளின் முகாம் ஒன்று இருப்பதாகச் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் தகவல்கள் முற்றிலும் பொய்யானவை என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்குப் பதிலளித்த போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர், "பளை வனப்பகுதியில் விடுதலைப் புலிகளின் முகாம் குறித்து அதிர்ச்சி தரும் வெளிப்பாடு என்னும் தலைப்பில் சமூக ஊடகங்களில் வெளியான காணொளி தொடர்பாக விசாரணைகள் நடத்தப்பட்டன.
பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி
இச்சம்பவம் தொடர்பாக தற்போது கிடைத்துள்ள தகவல்களின்படி, கிளிநொச்சி மாவட்டத்தின் அக்ராயன்குளம் காவல்துறை பிரிவிற்குட்பட்ட கண்ணகிபுரம் மேற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவிலுள்ள 'முக்கன்பன்' எனப்படும் பகுதியிலேயே இச்சம்பவம் நடந்துள்ளது.

இப்பகுதி 1919 ஆம் ஆண்டு நவம்பர் 17 ஆம் திகதியிடப்பட்ட 70/64 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தல் மூலம் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
2025 ஆம் ஆண்டு முதல் இந்த வனப்பகுதியில் சட்டவிரோதமாக மரங்கள் அழிக்கப்பட்டு நிலம் துப்புரவு செய்யப்படுவதாகத் தகவல்கள் பதிவாகியிருந்தன.
2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இங்கு மூன்று மாடிக் கட்டிடம் ஒன்று கட்டப்படுவது தொடர்பில் தகவல்கள் கிடைத்தன. தற்போது அங்கு 4 மாடிகள் கட்டப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இக்காலப்பகுதியில் வன அலுவலகத்தினால் பல சோதனைகள் நடத்தப்பட்டு, இதன் உரிமையாளரான தியாகராசா குணதீபன் என்பவருக்கு எதிராக 7 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இவர் அப்பகுதியில் முதலில் 10 ஏக்கர் நிலத்தையும், பின்னர் 20 ஏக்கர் நிலத்தையும் சட்டவிரோதமாகத் துப்புரவு செய்து கற்றாழை மற்றும் காய்கறி பயிர்ச்செய்கையில் ஈடுபட்டு வந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. 2026 பெப்ரவரி 6 ஆம் திகதி கிளிநொச்சி நீதவான் நீதிமன்றினால் அந்த நிலத்திற்குள் பிரவேசிப்பதற்குத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
பெப்ரவரி 17 ஆம் திகதி அத்தடை உத்தரவை நீக்குமாறு கோரப்பட்ட போதிலும், நீதிமன்றம் தடை உத்தரவை நீக்கவில்லை. அடுத்த வழக்கு விசாரணை ஓகஸ்ட் மாதம் 25 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
இதற்கிடையில், இந்த நபர் உழவு இயந்திரம் உள்ளிட்ட இயந்திரங்களைப் பயன்படுத்திச் சட்டவிரோதமாக மணல் அகழ்வு மற்றும் போக்குவரத்தில் ஈடுபட்டமை தொடர்பாகப் காவல்துறையினரால் மற்றொரு வழக்கும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு
2026-07-24 அன்று வன அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை தொடர்பாக இந்த உரிமையாளர் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர். இச்சோதனை நடவடிக்கைகளுக்காக விசேட அதிரடிப்படையினரின் (STF) உதவியும் பெறப்பட்டது. இவ்வாறு அவ்வப்போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் நீதிமன்றினால் அவர்களுக்குப் பிணை வழங்கப்பட்டுள்ளதுடன், வழக்கு விசாரணைகள் இனிவரும் நாட்களில் நடைபெறவுள்ளன. இந்தச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டே இவ்வாறானதொரு போலிச் செய்தி உருவாக்கப்பட்டுள்ளது. அங்கு எல்.டி.டி.ஈ. பயிற்சி முகாம் நடத்தப்பட்டதாகக் கூறப்படுவது முற்றிலும் போலிச் செய்தியாகும்.

இவ்வனப்பகுதிக்குள் தமக்கு உரிமை இருப்பதாகக் கூறி உரிமையாளரால் நீதிமன்றத்தில் சில ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. அது தொடர்பிலும் விசாரணைகள் நடந்து வருகின்றன.
எதுஎவ்வாறாயினும், கடந்த ஒன்றரை வருட காலத்தில் இந்தச் சட்டவிரோதக் கட்டுமானங்கள் மற்றும் காடழிப்புக்கு எதிராக அவ்வப்போது கைதுகளும் நீதிமன்ற ஆஜர்படுத்தல்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அந்த இடத்தில் பயிர்ச்செய்கை ஒன்று இருப்பதுடன், மூன்று மாடிக் கட்டிடத்திற்குள் சில இயந்திரங்களுடன் கிராம மக்களை இணைத்து ஆடை உற்பத்தி நிறுவனமொன்று நடத்தப்பட்டு வருவதாகவே தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் அது பதிவாளர் நாயகம் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறப்படுகின்றன. அங்குள்ள உண்மை நிலைமை இதுவேயாகும். இத்தகைய பின்னணியில், அங்கு எல்.டி.டி.ஈ. பயிற்சி முகாம் இருப்பதாகப் பொய் பிரசாரத்தைப் பரப்பியவர்களுக்கு எதிராகவும் தற்போது சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 3 Evening