ஏழாக குறைக்கப்படும் சாதாரண தரப் பரீட்சை பாடங்கள்! வெளியாகியுள்ள தகவல்
வரலாறு மற்றும் அழகியல் ஆகிய பாடங்களை உள்பட க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் பாடங்களின் எண்ணிக்கையை ஏழாகக் குறைப்பதற்குத் திட்டமிட்டுள்ளதாக கல்விச் சீர்திருத்தங்கள் தொடர்பான உபகுழுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமரும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய தலைமையில் அண்மையில் நடைபெற்ற கூட்டத்தின் போதே இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
அத்தோடு, 12 மற்றும் 13 ஆம் வகுப்புகளில், சமூக ஒத்திசைவு, சட்டம் மற்றும் அறநெறி தொடர்பான புதிய பாடத் தொகுதிகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகவும் இதில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
2027 கல்விச் சீர்திருத்தங்கள்
2027 ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்பட திட்டமிடப்பட்டுள்ள பொதுக் கல்விச் சீர்திருத்தங்கள் மற்றும் முன்பள்ளிக் கல்விச் சீர்திருத்தங்களின் முன்னேற்றம் குறித்தும் இக்கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

ஆரம்பக் கட்டமாக, 2 மற்றும் 6 ஆம் தரங்களுக்கான செயல்முறைப் புத்தகங்கள், ஆசிரியர் வழிகாட்டிகள் மற்றும் பாடத் தொகுதிகள் ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ளதுடன், ஆசிரியர்களுக்கான பயிற்சிகளும் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆரம்பகால சிறுவர் கல்வி
இந்த புதிய சீர்திருத்தங்கள் குறித்த விழிப்புணர்வு வேலைத்திட்டங்களின் தொடர் ஒன்றும் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இது தவிர, ஆரம்பகால சிறுவர் கல்வியை முறைப்படுத்துவதற்காக தேசிய முன்பள்ளிக் கொள்கை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாகவும் இக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்பள்ளிப் பதிவு, பாடத்திட்டம் தயாரித்தல், ஆசிரியர் வழிகாட்டிகள் மற்றும் பயிற்சித் திட்டங்கள் ஆகிய அனைத்தும் இதில் அடங்குவதுடன், இவற்றுக்கான நடவடிக்கைகள் தற்போது தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |