5 ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் தாமதம்: எடுக்கப்படவுள்ள சட்ட நடவடிக்கை
நாடளாவிய ரீதியில் 2723 பரீட்சை மையங்களில் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை நேற்று நடைபெற்றது. இம்முறை புலமைப்பரிசில் பரீட்சைக்கு 294,089 மாண வர்கள் தோற்றுவதற்கு தகுதி பெற்றிருந்தனர்.
கேகாலை பகுதியில் உள்ள ஒரு பாடசாலையில், 5 ஆம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் மாணவர்களுக்கு வழங்கவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில், உரிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் சம்பளம்
புலமைப்பரிசில் பரீட்சை என்பது குழந்தைகளின் கல்வி எதிர்காலத்திற்கு ஒரு முக்கியமான பரீட்சை என்பதால், இதுபோன்ற சம்பவங்களால் குழந்தைகளுக்கு ஏற்படும் அநீதிக்கு அதிகாரிகளின் கவனம் ஈர்க்கப்பட வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், இந்த முறை உயர்தர பரீட்சை பணிகளில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் போதுமானதாக இல்லை என்றும் இலங்கை ஆசிரியர் சங்கம் சுட்டிக்காட்டுகிறது.
இதற்கமைய, உயர்தர பரீட்சைப் பணிகளில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களின் பொறுப்புகளையும் தற்போதைய செலவுகளையும் கருத்தில் கொண்டு, அவர்களுக்குப் போதுமான சம்பளத்தை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
உயர்தரப் பரீட்சை
இதேவேளை, 2026 கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை இன்றிலிருந்து (10) ஆரம்பமாகி செப்டம்பர் 05 ஆம் திகதி வரை நாடு முழுவதிலும் உள்ள 2,532 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளது.

இம்முறை பரீட்சைக்காக 264,496 பாடசாலைப் பரீட்சார்த்திகளும் 107,814 தனிப்பட்ட பரீட்சார்த்திகளும் அடங்கலாக மொத்தம் 372,310 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |