அமெரிக்க H-1B விசா கட்டண உயர்வு - நடந்த மாற்றம்
அமெரிக்காவின் 'எச் 1 - பி' விசாவுக்கான கட்டணம் உயர்த்தப்பட்டதைத் தொடர்ந்து விண்ணப்பங்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது.
இதன் காரணமாக, விசாவுக்குத் தேர்வாகும் விகிதம் முன்னெப்போதும் இல்லாத வகையில் 75 சதவீதம் வரை உயர்ந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவில் சிறப்பு நிபுணத்துவம் வாய்ந்த பணிகளில் வெளிநாட்டினரைப் பணியமர்த்த வழங்கப்படும் 'எச் 1 - பி' விசாக்களுக்கு ஆண்டுக்கு 85,000 என்ற ஒதுக்கீடு நடைமுறையில் உள்ளது.
கடுமையான கட்டுப்பாடுகள்
அமெரிக்க ஜனாதிபதியாக ட்ரம்ப் பதவியேற்றதை தொடர்ந்து அமெரிக்கா முதலில் என்ற கொள்கையை நடைமுறைப்படுத்துவதாக அறிவித்திருந்தார்.

அமெரிக்காவில் தங்கி பணிபுரிவதற்கான எச்-1பி விசா கட்டணத்தை இந்திய ரூபாயில் 90 இலட்சமாக டொனால்ட் ட்ரம்ப் உயர்த்தினார்.
மேலும், பொதுவான லொட்டரி முறை மாற்றப்பட்டு, உயர் ஊதியப் பணிகளுக்குத் தகுதியானவர்களுக்கு லொட்டரி முறையில் நான்கு வாய்ப்புகள் வழங்கும் விதி கொண்டு வரப்பட்டது.
இந்தக் கடுமையான கட்டுப்பாடுகள் காரணமாக, அமெரிக்க நிறுவனங்கள் எச் 1 - பி விசாக்களுக்கு நிதி அளிப்பதைக் குறைத்துள்ளன.
விசா தேர்வு வாய்ப்பு
வழக்கமாக ஆண்டுக்கு 7 இலட்சம் விண்ணப்பங்கள் குவியும் நிலையில், இந்த ஆண்டு 2.35 இலட்சம் விண்ணப்பங்கள் மட்டுமே வந்துள்ளன.

விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை குறைந்ததால், முன்பு 33 சதவீதமாக இருந்த விசா தேர்வு வாய்ப்பு, தற்போது 75 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.
இது அமெரிக்காவில் பணியாற்ற விரும்பும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்குச் சாதகமான அம்சமாகப் பார்க்கப்படுகிறது.
இந்தக் கட்டண உயர்வு தொடர்பான வழக்குகள் தற்போது அமெரிக்க நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |