பரபரப்பை ஏற்படுத்திய “பண்டோரா ஆவண” விசாரணைக்கு நடந்தது என்ன?
பரபரப்பை ஏற்படுத்திய பண்டோரா ஆவணங்கள் ஊடாக வெளிப்பட்ட இலங்கையர்கள் சம்பந்தமாக இந்நாட்டில் தொடங்கிய புலன்விசாரணைகளின் முன்னேற்றம் பற்றி மக்களுக்கு அறிந்துகொள்ளக் கிடைக்காமைக்கான காரணம் என்ன என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake ) கேள்வி எழுப்பியுள்ளார்.
நேற்றைய தினம் நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த கேள்வியினை எழுப்பியுள்ளார். தொடர்ந்தும் அவர் தனது உரையில்,
கடந்த 2021 ஆம் ஆண்டின் ஒக்டோபர் 3 ஆந் திகதி முற்றாய்வுசார்ந்த ஊடகவியலாளர்களின் சர்வதேச ஒன்றியம் எனப்படுகின்ற அமைப்பினால் 35 உலக நாடுகளின் முன்னாள் அரச தலைவர்கள், பிரதமர்கள் போன்றே அமைச்சர்கள், நீதிவான்கள், நகரபிதாக்களை உள்ளிட்ட 400 இற்கு மேற்பட்ட அரச உத்தியோகத்தர்கள் முறைதகாத வழியில் ஆதனங்களை ஈட்டிக்கொள்ளலுடன் தொடர்புடைய அறிக்கையொன்று வெளியிடப்பட்டிருந்தது.
அவர்களால் இரகசியமாக மேற்கொள்ளப்பட்ட புலன்விசாரணைகளுக்குப் பின்னர் திட்பநுட்பத்தன்மையை உறுதிப்படுத்திக்கொள்ள இயலுமான சம்பவங்களைச் சார்ந்ததாக இவ்வறிக்கை வெளியிடப்படுவதாக மேற்படி அமைப்பு கூறியது.
பண்டோரா ஆவணங்கள் எனப் பிரபல்யமடைந்த இந்த ஆவணங்கள் மூலமாக இலங்கையின் முன்னாள் பிரதி அமைச்சராக விளங்கிய நிரூபமா ராஜபக்சவும் அவரது கணவரான நடேசன் ஆகியோர் தொடர்பான வெளிப்படுத்தலும் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
அதற்கிணங்க அவர்கள் இருவரும் பதிவேடுகளில் மாத்திரம் குறிப்பிடப்பட்ட போலியான கம்பெனியொன்று மூலமாக மிகப்பெருந்தொகையான பணத்தை கையாண்டிருப்பதாகவும் இலண்டன் மற்றும் சிட்னி நகரங்களில் சுகபோக வீடுகளைக் கொள்வனவு செய்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
சட்டத்திலிருந்து மறைக்கத்தக்க இயலுமை நிலவுகின்ற வெளிநாடுகளில் போலியான கம்பெனிகள் மற்றும் நம்பிக்கைப் பொறுப்புகள் மூலமாக இலங்கை அரசாங்கத்துடன் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபட்டுள்ள கம்பெனிகளில் மதியுரை ஒப்பந்தங்கள் பெறப்பட்டுள்ளதாகவும் மேற்படி நம்பிக்கைப் பொறுப்புகள் ஊடாக ஈட்டப்படுகின்ற பணத்திலிருந்து பெறுமதிமிக்க கலைப்படைப்புகள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டிருந்தன.
திருநடேசனின் நீண்டகால கணக்காளர் நிறுவனமான சிங்கப்பூரின் ஏஷியாசிட்டி டிரஸ்ற் கம்பெனியின் இரகசியமான மின்னணுவியல் கடிதங்களின்படி அவரது ஒட்டுமொத்த செல்வம் 160 மில்லியன் டொலரைவிட அதிகமானதென கணிப்பிடப்பட்டிருந்தது.
அதைப்போலவே கடந்த அரசாங்கங்களின் பலம்பொருந்திய அரச உத்தியோகத்தராக விளங்கிய தற்போது பிரித்தானியாவில் வசிக்கின்ற இராமலிங்கம் பாஸ்கரலிங்கத்துடன் தொடர்புடைய முறைதகாத ஈட்டல்கள் அவரால் பிரிட்டிஷ் வேர்ஜின் தீவுகளில் தாபிக்கப்பட்டுள்ள கம்பெனிகள் மற்றும் நம்பிக்கைப் பொறுப்புகள் மூலமாக பல்வேறு முதலீடுகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனவெனவும் பிரித்தானியாவில் ஆதனங்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதெனவும் பன்டோறா ஆவணங்களில் வெளிப்படுத்தப்பட்டிருந்தன.
இந்த வெளிப்படுத்தல்கள் பற்றி சமூகத்தில் தோன்றிய விரிவான உரையாடல் காரணமாகவும் முன்னாள் பிரதியமைச்சர் நிரூபமா ராஜபக்ச நிகழ்கால அரசாங்கத்தின் பிரதானிகளுடன் நெருங்கிய உறவுமுறைத் தொடர்புகளைக் கொண்டுள்ளதாலும் அரச தலைவர் சார்பில் அரச தலைவரன் சட்டப் பணிப்பாளர் நாயகம் மேற்படி வெளிப்படுத்தல்களை மூன்று நாட்களுக்குப் பின்னர் ஒக்டோபர் 6 ஆந் திகதி இலஞ்ச ஊழல் புலனாய்வு ஆணையாளரிடம் வேண்டுகோள் விடுத்து ஒரு மாத காலத்திற்குள் அது பற்றிய அறிக்கையொன்றினை வழங்குமாறு அரச தலைவர் பணிப்புரை விடுத்துள்ளதாக கூறியதாக ஊடகங்கள் அறிக்கை செய்திருந்தன.
எவ்வாறாயினும் அத்தகைய புலன்விசாரணை மேற்கொள்ளப்பட்டு நிறைவடைந்தாகவோ அல்லது அது அறிக்கையொன்றை வெளியிட்டதாகவோ அதற்கமைவாக சட்ட செயற்பாங்கு ஆரம்பிக்கப்பட்டதாகவோ இற்றைவரை அறியக்கிடைக்கவில்லை.
குறிப்பாக இந்த முறைதகாத ஈட்டல்களுடன் தொடர்புடைய ஆட்கள் அரசாங்கத்தின் தலைவர்களின் நெருங்கிய உறவினர்களாக அமைகின்ற சந்தர்ப்பத்தில் அரசாங்கத்தின் இந்த விசாரணை செயற்பாங்கு தொடர்பில் மக்கள் மத்தியில் பலத்த சந்தேகமே நிலவுகின்றது.
இந்த நிலைமையின்கீழ் தோன்றுகின்ற பின்வரும் சிக்கல்களுக்கான பதில்களை சம்பந்தப்பட்ட அமைச்சர் சபையில் முன்வைப்பாரென எதிர்பார்க்கப்படுகின்றது.
1. பண்டோரா ஆவணங்களால் மேற்கொள்ளப்பட்ட வெளிப்படுத்தல்கள் சம்பந்தமாக அரசாங்கத்தின் ஏதேனுமொரு நிறுவனம் ஊடாக முறையான புலன்விசாரணையொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதா?
2. ஆமெனில் அது எந்நிறுவனத்தினால்? அதன் மூலமாக மேற்படி பன்டோறா வெளிப்படுத்தல்கள் பற்றிய ஏதேனும் உறுதிப்படுத்திக்கொள்ளல் மேற்கொள்ளப்பட்டுள்ளதா?
3. பன்டோறா ஆவணங்கள் மூலமாக மேற்கொள்ளப்பட்ட வெளிப்படுத்தல்கள் பற்றி ஏதேனும் சட்ட நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதா?
4. பண்டோறா ஆவணங்கள் மூலமான வெளிப்படுத்தல்கள் சம்பந்தமான அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன? என அவர் மேலும் கேள்வி எழுப்பியுள்ளார்.