யாழ் நகரில் பெருக்கெடுக்கும் வெள்ளம்- தடைபோடப்பட்ட வீதிப்போக்குவரத்து! (புகைப்படங்கள்)
யாழ்ப்பாணக் குடாநாட்டில் அதிக மழையின் காரணமாக நகரின் பெரும் பகுதி வெள்ளத்தினால் மூழ்கி காட்சியளிக்கின்றது.
வெள்ளநீர் தேங்கி நிற்பதன் காரணமாக யாழ்ப்பாணம் ஸ்டான்லி வீதி, பொதுமக்கள் போக்குவரத்திற்காக ஒரு வழி வீதியாக காவல்துறையினரால் அறிவிக்கப்பட்டு வீதித் தடைகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
கடந்த இரு நாட்களாக குடாநாட்டில் அதிக மழை பொழிவதோடு இன்று அதிகாலை முதல் அடை மழை பொழிகின்றது. இதனால் நகரின் மத்தியில் உள்ள 43 குளங்களும் நிரம்பி வழிகின்றன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேநேரம் யாழ் நகரின் மத்தியில் உள்ள ஸ்ரான்லி வீதி, கண்ணாபுரம், சோலைபுரம், கற்குளம், பொம்மைவெளி, நித்திய ஒளி, மற்றும் திருநெல்வேலி உள்ளிட்ட மாநகர சபை பிரதேசங்கள் நீரில் மிதக்கின்றன.
யாழ்ப்பாணக் குடாநாட்டின் நகரின் மத்தியில் நீர் வழிந்தோடும் பிரதான இடங்கள் பல தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளமையினால் மிக வேகமாக நீர் அதிகரிப்பதனால் மக்கள் பெரும் அவலத்தை எதிர் நோக்குகின்றனர்.
இதேநேரம் யாழ்ப்பாணம் மாநகரில் கழிவு நீர் ஓடும் கால்வாய் வாய்க்கால் சீரமைக்கப்படாமை காரணமாகவே இந்த நிலைமை ஏற்படுவதாக பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.




