மகிந்தவினால் வழங்கப்பட்ட உயர்பதவி! மார்தட்டிக்கொண்ட துமிந்த சில்வா
நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு அரச அதிகாரிகள் மிகுந்த பொறுப்புடன் செயற்பட வேண்டும் என தேசிய வீடமைப்பு அதிகார சபையின் தலைவர் துமிந்த சில்வா (Duminda Silva) தெரிவித்துள்ளார்.
கண்டி - கொக்கனகல, மல்கமன்சந்தி, பூஜாப்பிட்டி மற்றும் மேல்கித்துல்கல ஆகிய பகுதிகளில் தேசிய வீடமைப்பு அதிகார சபையின் நிதி ஒதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்ட வீடுகள் கையளிக்கும் நிகழ்வு நேற்றைய தினம் இடம்பெற்றது.
இங்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
குறைந்த வருமானம் கொண்ட சாதாரண பொதுமக்களுக்குச் சேவையாற்றும் நிறுவனமே வீடமைப்பு அதிகார சபையாகும். அதில் மக்களுக்கு நிவாரணத்தை பெற்றுக்கொடுக்க வேண்டிய தேவையுமுள்ளது.
கொழும்பு மாவட்ட மக்களுக்காகப் பணியாற்றும்போது மக்களின் துயரம் எத்தகையது என்பதனை நான் அறிந்திருக்கிறேன். இதன் காரணமாகவே எனக்கு வீடமைப்பு அதிகார சபையின் தலைவர் பதவியைப் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ (Mahinda Rajapaksa) வழங்கியுள்ளார்.
இதன் மூலம் எதிர்காலத்தில் 70 ஆயிரம் வீடுகளை நிர்மாணிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மக்களுக்கான சிறந்த சேவையாற்றுபவர்களையே பொதுமக்கள் இன்று விரும்புவார்கள்.
நான் அரசியலுக்குள் மீண்டும் பிரவேசிப்பேனா இல்லையா என்பது எனக்குத் தெரியாது.
எனினும் சிறந்த சேவைகளை வழங்கியதன் காரணமாகவே எனக்கு இவ்வாறான பொறுப்புகள் வழங்கப்படுகின்றன. வீடமைப்பு அதிகார சபையின் பொறுப்புகளை ஏற்றதன் பின்னர் இரவு 9 மணிவரையில் பணிகளை செய்துவிட்டு வீட்டிற்கு செல்கிறேன். சில பணியாளர்கள் மாலை 4 மணிக்கு அலுவலகத்திலிருந்து சென்றுவிடுகின்றார்ககள்.
நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு அதிகாரிகள் அனைவரும் பொறுப்புடன் செயலாற்ற வேண்டும். சேதன பசளையினூடாக விவசாயத்துறையினை கட்டியெழுப்புவதே அரச தலைவரின் இலக்காகும்.
மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி), ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியினர் அதனைத் திசைத்திருப்புவதற்கு முயற்சித்து வருகின்றனர்.
சிறியளவிலான எண்ணிக்கையிலானோரே இவ்வாறான போராட்டங்களில் ஈடுபட்டு வருவகின்றனர் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.