இலங்கைக்கு கடத்த முயன்ற உயர்தர முந்திரிப் பருப்பு மூட்டைகள் பறிமுதல்!
இலங்கைக்குக் கடத்துவதற்காகப் படகில் ஏற்றப்பட்ட உயர்தர முந்திரிப் பருப்பு மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மண்டபம் அடுத்த மரைக்காயர்பட்டினம் கடற்கரையில் கடத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த மூட்டைகளே இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இந்திய மதிப்பில் 15 இலட்சம் ரூபாய் மதிப்பிலான 620 கிலோ உயர்தர முந்திரிப் பருப்பு மூட்டைகள் இச்சம்பவத்தில் கைப்பற்றப்பட்டுள்ளன.
கிடைத்த தகவல்
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், இராமநாதபுரம் மாவட்ட கடற்கரை இலங்கைக்கு மிக அருகில் இருப்பதால் தனுஷ்கோடி கடல் வழியாக மண்டபம், வேதாளை, மரைக்காயர்பட்டினம், குந்துகால், களிமண்குண்டு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து இலங்கைக்குக் கடல் வழியாக நாட்டுப்படகில் கஞ்சா, பீடி இலை பண்டல்கள், முந்திரிப் பருப்பு, கடல் அட்டை மற்றும் சமையல் மஞ்சள் உள்ளிட்ட பொருட்கள் கடத்தப்பட்டு வருகின்றன.

இந்தநிலையில் மண்டபம் அடுத்த மரைக்காயர்பட்டினம் கடற்கரையில் இருந்து இலங்கைக்குப் பைபர் படகில் பொருட்கள் கடத்த இருப்பதாகக் கியூ பிரிவு ஆய்வாளர் ஜீவமணிக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (26-02-2026) அதிகாலை கியூ பிரிவு காவல்துறையினர் மரைக்காயர்பட்டினம் கடற்கரையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது மரைக்காயர்பட்டினம் கடற்கரையில் இருந்து இலங்கைக்குப் படகில் கடத்துவதற்காக வாகனங்களில் கொண்டுவரப்பட்டு உயர்தர முந்திரிப் பருப்புகளை ஏற்றிக்கொண்டிருந்தபோது, கியூ பிரிவு காவல்துறை மடக்கிப் பிடிக்க முயன்றனர்.
முந்திரிப் பருப்புகள்
அப்போது இருவர் கடலில் குதித்துத் தப்பிய நிலையில், மரைக்காயர்பட்டினம் பகுதியைச் சேர்ந்த ஒருவரைக் கைது செய்து அவரிடமிருந்த பொருட்களைப் பறிமுதல் செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட 20-இற்கும் மேற்பட்ட மூட்டைகளைப் பார்த்தபோது அதில் ரூபாய் 15 இலட்சம் மதிப்பிலான 620 கிலோ எடை கொண்ட உயர்தர முந்திரிப் பருப்புகள் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து முந்திரிப் பருப்பு அடங்கிய சாக்கு மூட்டைகள், கடத்தலுக்குப் பயன்படுத்திய இரண்டு இருசக்கர வாகனங்கள், இரண்டு நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் படகு உள்ளிட்டவற்றை மண்டபம் சுங்கத்துறை அலுவலகத்தில் கியூ பிரிவு காவல்துறையினர் ஒப்படைத்தனர்.
மேலும் கைது செய்யப்பட்ட நபரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதுடன், கடலில் குதித்துத் தப்பிய மர்ம நபர்களைக் கியூ பிரிவு காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
🛑செய்திகள் - Nayan
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |



