தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் வீட்டுக்கு தீ - எரிந்து நாசமான உடமைகள்
தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட ஏறாவூர் புல்லுமலை வட்டார பிரதேச சபை உறுப்பினர் சிவாநந்தனின் வீடு தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நேற்று (19.10.2025) இரவு 11 மணியளவில் வீடு மற்றும் வீட்டிலிருந்த மோட்டார் சைக்கிள் ஆகியவற்றுக்கு அடையாளம் தெரியாத நபர்களால் தீ வைக்கப்பட்டுள்ளதாக சிவாநந்தன் தெரிவித்தார்.
சம்பவத்தின் போது அவர் வீட்டில் இருக்கவில்லை எனவும் தனது தாயார் மாத்திரமே வீட்டில் இருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
திட்டமிட்ட செயல்
இவ்விடயம் தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த அவர், 'இது தற்செயலான விடயம் அல்ல, திட்டமிட்டு மேற்கொள்ளபட்டுள்ளது.
காவல்துறையில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என எதிர்ப்பார்க்கின்றேன்.
இது என் மீதான தனிப்பட்ட ரீதியிலான பிரச்சினையா அல்லது அரசியல் பழிவாங்கலா என்பது தெரியவில்லை.” என தெரிவித்தார்.
இந்நிலையில், குறித்த சம்பவத்தின் போது பிரதேச சபை உறுப்பினரின் தாயார் மாத்திரமே வீட்டில் இருந்துள்ள நிலையில் சம்பவத்தையறிந்து தாயார் வெளியே வந்து பார்க்கும் சந்தர்ப்பத்தில் அடையாளம் தெரியாத மோட்டார் சைக்கிள் ஒன்று குறித்த பகுதியிலிருந்து சென்றதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
