தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதாதைகள் மீது அழுகிய தக்காளிகளால் தாக்குதல்!
வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் வவுனியாவில் எதிர்ப்பு போராட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.
சர்வதேச மனித உரிமை தினமான இன்று வடமாகாணத்தின் 5 மாவட்டங்களையும் சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் எதிர்ப்பு பேரணி ஒன்றை மேற்கொண்டனர்.
வவுனியா கந்தசுவாமி கோயிலுக்கு முன்னால் ஆரம்பமான பேரணி நகர வீதியூடாக சென்று பழைய பேருந்து நிலையத்திற்கு முன்னால் நிறைவடைந்தது.
இதன் போது வவுனியாவில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது அழுகிய தக்காளி பழங்கள் வீசி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
சர்வதேச மனித உரிமை தினமான இன்று வவுனியா பிரதான தபாலகத்திற்கு முன்பாக 2120 வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் இந்த கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.
தக்காளித் தாக்குதல்
இந்த போராட்டத்தின் போது, தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிறிலங்கா அரசுடன் தனியாக பேச வேண்டாம், என்ற கோசங்களை எழுப்பியிருந்ததுடன், பதாதைகளையும் தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் போது போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள், தமிழ் எம்பிக்களின் புகைப்படங்கள் தாங்கிய பதாதைக்கு அழுகிய தங்காளி பழங்களினால் எறிந்து, மத்தயஸ்தம் இல்லாமல் பேச்சுக்கு செல்லக்கூடாது என தெரிவித்து தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.









