சகல தரப்பிடமும் மனித உரிமை மீறல் குறித்த விசாரணை - ஐ நா மீளாய்வு குழு பரிந்துரை
சிறிலங்காவில் நடந்த அனைத்து விதமான மனித உரிமை மீறல்கள் குறித்தும் இராணுவத்தினர் உள்ளிட்ட சகல தரப்பினரிடமும் சுயாதீனமானதும் பக்க சார்பற்றதுமான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் மீளாய்வு குழு சிறிலங்காவிற்கு பரிந்துரைத்துள்ளது.
சிறிலங்காவின் மனித உரிமைகள் நிலைவரம் குறித்து மீளாய்வினைக் கடந்து பெப்ரவரி மாதம் முதலாம் திகதி மேற்கொண்டிருந்த நிலையில், சிறிலங்கா மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் பற்றிய பரிந்துரைகளை உள்ளடக்கிய 24 பக்க அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வறிக்கையின் படி, காணாமல் ஆக்கப்படல்கள் மற்றும் தன்னிச்சையான தடுத்துவைப்புக்களை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்புப்கூறலை உறுதிப்படுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தேசிய நல்லிணக்கம்
மேலும், காணாமல் போனவரின் குடும்பங்களுக்கு உரிய பதிலைக் கூறுவதுடன் இழப்பீட்டை வழங்கள், பயங்கரவாதத்தடைச் சட்டத்தை முற்றாக நீக்குவதுடன் அதற்குப் பதிலாகக் கொண்டுவரப்படும் புதிய சட்டம் சர்வதேச நியமங்களுக்கு அமைவாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அதனில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அதுமாத்திரமன்றி உள்ளகப் பொறிமுறை நிறுவுதல், வெறுப்புணர்வுப் பேச்சு மற்றும் அடக்குமுறைகளை தடுப்பதற்கு ஏற்ற செயன்முறையொன்றை நிறுவுவதன் மூலம் தேசிய நல்லிணக்கம் தொடர்பான கொள்கையை மேலும் வலுப்படுத்துமாறும் அந்த குழு தெரிவித்துள்ளது.
