30 வருட அரசியல் வாழ்வில் இப்படி நடந்ததே இல்லை -மைத்திரி வெளிப்படை
30 வருட அரசியல் வாழ்வில்‘குழப்பமான’ நாடாளுமன்றம்
தனது 30 வருட அரசியல் வாழ்வில் இப்படி ஒரு ‘குழப்பமான’ நாடாளுமன்றத்தை தான் பார்த்ததில்லை என முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாடு தற்போது எதிர்கொண்டுள்ள இக்கட்டான சூழ்நிலையில் இருந்து மீட்பதற்காக அரசாங்கம் மேற்கொள்ளும் எந்தவொரு நல்ல நடவடிக்கைக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (SLFP) ஆதரவளிக்க தீர்மானித்துள்ளது.
இந்த நோக்கத்திற்காக, "அதிபர் கறுப்பா அல்லது வெள்ளையா" என்பது கேள்வியாக இருக்கக்கூடாது.

அரசியல் ஸ்திரத்தன்மை
"தேசிய மற்றும் சர்வதேச அளவில் தேவையான சலுகைகளை பெறுவதற்கு சுதந்திரமாக செயல்பட சிறிது காலம் கொடுக்க வேண்டும்.சர்வதேச நிதி நிறுவனங்களும், சர்வதேச பொருளாதார சக்திகளும் நமது அரசியல் ஸ்திரத்தன்மையை பார்த்து நமக்கு உதவுகின்றன. நாம் சரியும் அரசாங்கமாக இருந்தால், அவர்கள் எங்களுக்கு பணம் கொடுக்க மாட்டார்கள்.
எனது 30 ஆண்டுகால அரசியலில் இதுபோன்ற ‘குழப்பமான’ நாடாளுமன்றத்தை பார்த்ததில்லை என்றும், 225 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றம் தற்போது 10-12 பிரிவுகளாகப் பிரிந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
கட்சிகளுக்குள் பிளவு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) 5-6 குழுக்களாகப் பிரிந்துள்ளதாகவும், ஐக்கிய மக்கள் சக்தி (SJB) க்கும் பல உள் பிரச்சினைகள் இருப்பதை காணக்கூடியதாக இருப்பதாகவும் அவர் கூறினார்.
தமது 14 எம்.பி.க்களில் 5 பேரை, கட்சியில் தொடர்ந்து இருக்குமாறு தாம் பலமுறை கோரிக்கை விடுத்திருந்த போதிலும், அவர்களில் 5 பேர் வெளியேறியதை அவரது சொந்தக் கட்சி கூட சமீபத்தில் பார்த்ததாகக் குறிப்பிட்டார்.