யாழில் சட்டவிரோத சிறுவர் இல்லம் - துன்புறுத்தப்பட்ட சிறுவர்கள் ; வெளியான உண்மைகள்!
யாழ்ப்பாணம், இருபாலை பகுதியில் சட்டவிரோதமான முறையில் சிறுவர் இல்லம் ஒன்றினை நடத்தியமை மற்றும் அங்கிருந்த சிறுவர்களை துன்புறுத்திய குற்றச்சாட்டில் அருட்சகோதரி உள்ளிட்ட மூவர் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இருபாலை பகுதியில் கிறிஸ்தவ சபை ஒன்றினால் நடத்தப்பட்டு வந்த சிறுவர் இல்லத்தில் இடம்பெற்ற துன்புறுத்தல்கள் தாங்க முடியாமல் மூன்று சிறுமிகள் இல்லத்தில் இருந்து தப்பியோடி உள்ளனர்.
இது தொடர்பில் தகவல்கள் வெளியாகிய நிலையில் விசாரணைகளை சிறுவர் நன்னடத்தை பிரிவினர் கோப்பாய் காவல்துறையினருடன் இணைந்து முன்னெடுத்தனர்.
சட்டவிரோத சிறுவர் இல்லம்
இதன் போது , குறித்த சிறுவர் இல்லமானது , சிறுவர் இல்லத்திற்கான அனுமதிகள் பெறப்படாது நடாத்தப்பட்டு வந்தமை கண்டறியப்பட்டதுடன் , அங்கு இருந்த 13 சிறுவர்களும் மீட்கப்பட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட சிறுவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, சிறுவர்களிடம் கடுமையான வேலைகளை வாங்கியமை , உடல் ரீதியான துன்புறுத்தல்கள் சித்திரவதைகள் மேற்கொள்ளப்பட்டமை , உளரீதியான பாதிப்புக்களை ஏற்படுத்தியமை , கட்டாய மத மாற்றத்திற்கு உள்ளாக்கியமை உள்ளிட்ட விடயங்கள் தெரிய வந்துள்ளன.
தொடர்ந்து, மீட்கப்பட்ட 13 சிறுவர்கள் மற்றும் சிறுவர் இல்லத்தில் இருந்து தப்பியோடிய நிலையில் மீட்கப்பட்ட 03 சிறுவர்கள் உட்பட 16 சிறுவர்களையும் சட்ட வைத்திய அதிகாரியிடம் முற்படுத்தி வைத்திய அறிக்கை பெறுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, சிறுவர் இல்ல முகாமையாளர், இல்ல காப்பாளர் மற்றும் சமையலாளர் ஆகிய மூவரையும் காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியுள்ளனர்.
அதனைத்தொடர்ந்து, முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளை அடுத்து மூவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
கிளிநொச்சியில்
இதேவேளை, இதேபோன்று மற்றுமொரு சிறுவர் இல்லம் குறித்த இல்லத்திற்கு அருகில் நடாத்தப்படுவதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.
அத்துடன் குறித்த சபையின் கீழான இரு சிறுவர் இல்லம் கிளிநொச்சியில் நடாத்தப்படுவதாகவும் தெரிய வந்துள்ளது.
குறித்த சிறுவர் இல்லங்களுக்கான அனுமதிகள் உரிய முறையில் பெறப்பட்டுள்ளனவா? அங்குள்ள சிறுவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனரா? போன்ற விடயங்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
