சட்டவிரோத பிரமிட் முதலீட்டு திட்டம் : பணிப்பாளருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
இலங்கை மத்திய வங்கியால் (CBSL) தடைசெய்யப்பட்ட சட்டவிரோத பிரமிட் முதலீட்டுத் திட்டம் ஒன்றை நடத்தி, 225 கோடி ரூபாவுக்கு மேல் சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் செய்தமை தொடர்பாக கைதுசெய்யப்பட்ட அந்த நிறுவனத்தின் பணிப்பாளரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன்படி, குறித்த நபரை எதிர்வரும் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு (Colombo) நீதவான் நீதிமன்றம் இன்று (30) உத்தரவு பிறப்பித்தது.
சந்தேக நபர், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் (CID) கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தார்.
56 வங்கிக் கணக்குகள்
குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கையில், சந்தேக நபர் நிறுவனம் ஒன்றை நடத்தி பிரமிட் முதலீட்டுத் திட்டம் ஒன்றை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டது.
அதற்கமைய, 2023ஆம் ஆண்டு ஐந்து மாத காலப்பகுதியில், அந்த நிறுவனத்தின் 56 வங்கிக் கணக்குகள் மூலம் 220 கோடி ரூபாவுக்கு மேல் பணம் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டது.
குற்றப் புலனாய்வுத் திணைக்களம்
அத்துடன் இந்தப் பணம் எந்த தரப்பினருக்கு சென்றது என்பது குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தில் தெரிவித்தது.
இதனையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக கைதுசெய்யப்பட்ட அந்த நிறுவனத்தின் பணிப்பாளரான எரங்க தில்ஷான் மீதான விசாரணைகள் இன்னும் முடிவடையாததால், அவரை விளக்கமறியலில் வைக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தில் கோரியது.
இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதவான், சந்தேக நபரை எதிர்வரும் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
