பத்திரிக்கை தொழிற்துறையில் ஏற்பட்டுள்ள பாதிப்பு!
நாட்டில் செய்தித்தாள்களை அச்சிடுவதற்காகப் பயன்படுத்தப்படும் காகிதங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன் காரணமாக தற்போது சகல பத்திரிக்கை தொழிற்துறையினரும் பாதிப்பினை எதிர்நோக்கியுள்ளனர்.
உலகளவில் காகிதங்களின் உற்பத்தியில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி மற்றும் டொலர் தட்டுப்பாடு என்பன இதற்கு பிரதான காரணங்களாகும் என பத்திரிக்கை தொழிற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதனால் செய்தித்தாள்களின் உற்பத்தி செலவினம் அதிகரித்துள்ளதுடன், பத்திரிக்கை தொழிற்துறையினர் பாரிய அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.
இதன்காரணமாக செய்தித்தாள்களை அச்சிடுவதற்காகப் பயன்படுத்தப்படும் காகிதங்களின் விலையானது, கடந்த மாதத்தை காட்டிலும் இந்த மாதம் இரட்டிப்பாக அதிகரித்துள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஒரு டன் காகிதம் 450 அமெரிக்க டொலராக காணப்பட்ட நிலையில் தற்போது 800 அமெரிக்க டொலராக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.