மூடிய அறையில் இடம்பெற்ற முக்கிய சந்திப்பு - சுமந்திரன் வெளியிட்ட தகவல்
நாட்டின் தற்போதைய இக்கட்டான சூழ்நிலையை கருத்தில் கொண்டு நாட்டில் உள்ள முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மூடிய அறையில் கடந்த தினத்தில் சந்திப்பொன்றை மேற்கொண்டதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
நாடு எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடி தொடர்பில் அறிக்கை ஒன்றினை விடுத்துள்ள அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இலங்கை முன்னெப்போதும் இல்லாத அளவு பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது. குறிப்பாக உழைக்கும் மக்கள் உள்ளிட்ட அனைத்து பிரிவினரும் கடுமையாக கஷ்டப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஒரு நாடு என்ற வகையில் இந்த சவாலை சமாளிப்பதற்கு அனைவரும் ஒன்றுபட வேண்டிய அவசியம் உள்ளது. எவ்வாறாயினும், நெருக்கடியைத் தீர்ப்பதற்கான அரசாங்கத்தின் அணுகுமுறை சில முக்கிய கேள்விகளை எழுப்புகின்றன.
அரசாங்கத்திற்கு முக்கிய பொறுப்பு உள்ளது.
அரசாங்கம், வெளிநாட்டு கடன்களை செலுத்துவதில் மாத்திரம் அவதானம் செலுத்துகின்றது. எனினும் நாட்டு மக்களுக்கு அவசியமான பொருட்களை இறக்குமதி செய்வதற்கு தேவையான டொலரை இது மட்டுப்படுத்துகின்றது. வெளிநாட்டு கடன்களை வழங்குவதில் மாத்திரம் ஒரு நாடு பெருமை அடைந்து விடாது.
நாட்டு மக்கள் பசியின்றி வாழ்வதனை உறுதி செய்வதிலும் நாட்டின் பெருமை அடங்குகின்றது. இந்த இக்கட்டான சூழ்நிலையை உணர்ந்து நாட்டில் உள்ள முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மூடிய அறையில் கடந்த தினத்தில் சந்திப்பொன்றை மேற்கொண்டனர்.
மக்கள் வழங்கிய பொறுப்புக்கு அமைய, நெருக்கடி சூழ்நிலையில் இருந்து வெளியேறுவதற்கான மூலோபாயங்களை ஆராய்வதற்காக இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. அரசாங்க நிதி பற்றிய குழுவின் முன்னாள் தலைவர் என்ற வகையில் தாமும் இந்த சந்திப்பில் பங்கேற்றதாக எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இந்தக்கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, கபீர் ஹாசிம், ரணில் விக்கிரமசிங்க, ரவூப் ஹக்கீம், ரிஷாத் பதியுதீன், எம்.ஏ. சுமந்திரன், சி.வி. விக்னேஸ்வரன், கஜன் பொன்னம்பலம் உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர். ஜே.வி.பி.யை பிரதிநிதித்துவப்படுத்தும் ஹரினி அமரசூரிய இணையத்தில் கலந்துரையாடலில் கலந்துகொண்டுள்ளார்.
மேலும், கலாநிதி சாந்த தேவராஜன், கலாநிதி ரொஷான் பெரேரா, கலாநிதி அனிலா டயஸ் பண்டாரநாயக்க, கலாநிதி நிஷான் டி மெல் மற்றும் கலாநிதி ராம் மாணிக்கலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மாலை 5 மணி முதல் 7 மணி வரை கூட்டம் நடைபெற்றது.
