பிரித்தானியாவுடன் உறவுகொள்ளும் நாடுகளுக்கு முக்கிய செய்தி
பிரித்தானிய அரசாங்கத்துடன் உடன்படிக்கைகளை மேற்கொள்வது குறித்து உலக நாடுகளின் அரசாங்கங்களை, அயர்லாந்தின் துணைப் பிரதமர் எச்சரித்துள்ளார்.
கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவது தேவையற்றது எனக் கருதும் நாடாக பிரதமர் பொறிஸ் ஜோன்சன் (Boris Johnson) தலைமை வகிக்கும் பிரித்தானியா உள்ளதாக அவர் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்துடன் கடந்த 2019 ஆம் ஆண்டு எட்டப்பட்ட பிரக்ஸிட் உடன்படிக்கையை கிழித்தெறிவது குறித்தே அரசாங்கம் எப்போதும் கவனம் செலுத்துவதாக பிரதமர் பொறிஸ் ஜோன்சனின் முன்னாள் ஆலோசகர் டொமினிக் கம்மிங்ஸ் கூறியுள்ளார்.
டொமினிக் கம்மிங்ஸ்சின் இந்த சர்ச்சைக்குரிய கருத்து வெளியாகியதை தொடர்ந்து, அயர்லாந்தின் துணைப் பிரதமர் லியோ வரத்கர், பிரித்தானியாவுடன் வர்த்தக உடன்படிக்கைகளை செய்வது ஆபத்தானது என்ற தொனிப்பட கருத்து வெளியிட்டுள்ளார்.
பிரக்ஸிட்டை நிறைவேற்றுவதற்கான தளத்தை கடந்த 2019 ஆம் ஆண்டு தேர்தல் மூலம் பிரதமர் பொறிஸ் ஜோன்சன் பெற்றுக்கொண்டிருந்தார். வடக்கு அயர்லாந்துக்கான ஏற்பாடுகள் உள்ளடங்கலான சிறந்த பிரக்ஸிட் ஒப்பந்தம் குறித்து பிரசல்ஸ்சுடன் கலந்துரையாடியுள்ளதாக தேர்தல் காலத்தில் மீண்டும் மீண்டும் பொறிஸ் ஜோன்சன் சுட்டிக்காட்டியிருந்தார்.
எனினும் மேலும் சுதந்திரமாக வடக்கு அயர்லாந்துக்கு பொருட்களை அனுமதிக்கும் வகையில் தற்போதுள்ள உடன்படிக்கையை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை பிரித்தானியா முன்வைத்துவரும் நிலையில், அயர்லாந்து துணை பிரதமர் லியோ வரத்கர், பிரித்தானியாவின் செயற்பாடுகள் குறித்து விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
பிரக்ஸிட்டிற்கு பின்னரான உடன்படிக்கைக்கு மதிப்பளித்து பிரித்தானியா செயற்படும் வரை எந்தவொரு நாடுகளும் இருதரப்பு வர்த்தக உடன்படிக்கைகளை பிரித்தானியாவுடன் ஏற்படுத்திக்கொள்ளக் கூடாது என அவர் வலியுறுத்தியுள்ளார்.
பிரதமர் பொறிஸ் ஜோன்சன் நம்பிக்கை கொள்ள முடியாத ஒருவராக இருப்பதாக தெரிவித்துள்ள லியோ வரத்கர், இந்த செய்தி உலகில் உள்ள அனைத்து தரப்பினரையும் சென்றடைய வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.