சிறையில் இருந்து வெளியே வரவுள்ள இம்ரான் கான்!
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் ஊழல், மோசடி, கொலை மிரட்டல் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளால் பதவியை இழந்து, அரசியலிலும் செல்வாக்கை இழந்துள்ளார்.
கிரிக்கெட் வீரராக இருந்தபோது பாகிஸ்தான் மக்களால் கொண்டாடப்பட்ட இம்ரான் கான் ஊழல் குற்றச்சாட்டால் சிறையில் அடைக்கப்பட்டார்.
இவர் விளையாட்டையும் தாண்டி அரசியலில் ஆர்வமாக இருந்த காரணத்தால் 1996ஆம் ஆண்டு தெஹ்ரீக் –இ – இன்சாப் என்ற கட்சியை ஆரம்பித்தார்.
பிரதமராக பதவியேற்றார்

அரசியல் கட்சி சார்ந்த பணிகளில் தீவிரமாக செயற்பட்டு வந்த இவர் 2018ஆம் ஆண்டு பாகிஸ்தானின் 22ஆவது பிரதமராக பதவி ஏற்றார். இம்ரான் கான் ஆட்சிக்கு வந்த பிறகு அவர் மீதான சர்ச்சைகள் அதிகரித்தன.
2022ஆம் ஆண்டு பாகிஸ்தானில் நிலவிய கடும்பொருளாதார நெருக்கடி இம்ரான் கானை பதவியில் இருந்து கீழே கொண்டுவந்தது. பிரதமர் பதவி பறிபோனது மட்டுமன்றி மோசடி குற்றச்சாட்டிலும் சிக்கினார்.
இவர் பாகிஸ்தான் பிரதமராக இருந்த போது அரசுமுறை பயணமாக வெளிநாடுகளுக்கு சென்றபோது வழங்கப்படும் பரிசுப்பொருட்கள் அரசு கருவூலத்தில் ஒப்படைக்க வேண்டும் என்பது பாகிஸ்தான் அரசின் விதி. ஆனால், அவருக்கு கொடுக்கப்பட்ட பரிசுப் பொருட்களை அரசு கருவூலத்தில் ஒப்படைக்காமல், அவற்றை விற்று பண மோசடியில் ஈடுபட்டதாக இம்ரான் கான் மீது குற்றம் சாட்டப்பட்டது.
எதிரான வழக்குகள்

பிரதமராக இருந்த போது தனக்கு அளிக்கப்பட்ட பரிசுப்பொருட்களை, அரசின் பரிசுப்பொருட்களைப் பராமரிக்கும் ”தோஷகானா” இடம் ஒப்படைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
இம்ரான் கானிற்கு எதிராக ஊழல், மோசடி மற்றும் கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதற்கிடையே மோசடி வழக்கில் நீதிமன்றத்தில் முன்னிலையாக வந்த இம்ரான் கானை கடந்த மே மாதம் காவல்துறையினர் கைது செய்தனர்.
இதனால் பெரும் கலவரம் வெடித்து, இராணுவம் குவிக்கப்பட்டது. இம்ரான்கானை உடனடியாக விடுவிக்க வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் போராட்டங்களை மேற்கொண்டனர்.
தீர்ப்பு வழங்கப்பட்டது

இதற்கிடையில் கடந்த 5ஆம் திகதி முறைகேடு வழக்கை விசாரித்த இஸ்லாமாபாத் நீதிமன்றம் இம்ரான் கானை குற்றவாளி என உறுதி செய்து அவருக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
குற்றவாளியாக தண்டனை பெற்றதால் இம்ரான்கானின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிபோனதுடன், அவரால் 5 ஆண்டுகளில் தேர்தலில் போட்டியிட முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.
இந்த நிலையில் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில் இம்ரான் கான் வழக்கு தாக்கல் செய்தார். ந்த வழக்கு விசாரணைக்கு வந்தது, அதை விசாரித்த தலைமை நீதிபதி அமீர் ஃபரூக் மற்றும் நீதிபதி தாரிக் முகம்மது ஆகியோர், குற்றவழக்கில் இருந்து இம்ரான் கானை விடுத்து தீர்ப்பளித்தனர்.
இதன் மூலம் தண்டனை பெற்று ராவல்பிந்தி சிறையில் இருக்கும் இம்ரான் கான் பிணையில் விடுதலையாகி வெளியே வரவுள்ளார்.