அரசியல் பழிவாங்கல்களுக்கு உள்ளாகியவர்கள் உடன் விண்ணப்பியுங்கள் - இம்ரான் விடுத்த கோரிக்கை
அரசியல் பழிவாங்கல்களுக்கு உள்ளாகியவர்கள் ஐக்கிய மக்கள் சக்தியின் அரசியல் பழிவாங்கல் குழுவிற்கு விண்ணப்பியுங்கள் என திருமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் வர்த்தக மற்றும் தொழிற்சங்க உறுப்பினர்களின் கிழக்குமாகாண தலைவராக நியமிக்கப்பட்டதன் பின்னர் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார் .
தனது அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில், கடந்த 2015ஆம் ஆண்டுக்கு முன்னர் ஆட்சியில் இருந்த அரசாங்கத்தினால் அரசியல் பழிவாங்கல்ளுக்கு இலக்காகி நல்லாட்சி அரசு காலத்தில் அரசியல் பழிவாங்கல்களுக்கான நிவாரணத்தை வேண்டி விண்ணப்பித்தும் தீர்வு கிடைக்காதவர்களும், அதே போன்று தற்போதைய அரசாங்க காலத்தில் அரசியல் பழிவாங்கல்ளுக்கு உள்ளாகியவர்களும் ஐக்கிய மக்கள் சக்தியின் அரசியல் பழிவாங்கல் குழுவிற்கு விண்ணப்பிப்பதற்கான தமது ஆவணங்களை சமர்பிக்கவும்.
எதிர்காலத்தில் எமது அரசாங்கம் ஆட்சி அமைக்கும் சந்தர்ப்பத்தில் அரசியல் பழிவாங்கல்களால் பாதிக்கப்படடவர்களுக்கான தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும். ஆவணங்களை சமர்ப்பிப்பதற்கான முகவரி உள்ளிட்ட விடயங்கள் விரைவில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும்.
அத்துடன் கிழக்குமாகாணத்தில் உள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தொழிற்சங்கங்களை ஒருங்கிணைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளார்.