அவுஸ்திரேலியாவிற்கு படையெடுக்கும் இலங்கையர்களின் தொகை அதிகரிப்பு
இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவிற்கு செல்வதற்கு முயற்சிப்போரின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அந்த வகையில் இதுவரை சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவிற்குள் பிரவேசித்த சுமார் 100 பேர் நாடுகடத்தப்பட்டுள்ள அதேவேளை, அவுஸ்திரேலியாவிற்கு படகு மூலம் செல்வதற்கு முற்பட்ட 400 பேர் வரை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அவுஸ்திரேலியாவிற்கு செல்வதற்கு முயற்சிப்போரின் எண்ணிக்கை அதிகரிப்பு
சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியா செல்வதற்கு முயற்சித்த 399 பேர் இவ்வாண்டின் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் இதுவரையிலான காலப் பகுதிக்குள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக காவல்துறையின் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்தூவ தெரிவித்துள்ளார்.
எந்தவொரு காரணத்திற்காகவும் சட்டவிரோதமாக நாட்டிற்குள் பிரவேசிப்பதற்கும் அங்கு வசிப்பதற்கும் அவுஸ்திரேலிய அரசாங்கம் அனுமதிக்காது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அவுஸ்திரேலிய அரசாங்கம் அனுமதிக்காது
அவ்வாறு பிரவேசிப்போரை அவுஸ்திரேலிய அரசாங்கம் நாடு கடத்தும் என காவல்துறையின் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்தூவ கூறியுள்ளார்.
அந்த வகையில் இதுவரை 99 பேர் அவுஸ்திரேலியாவில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளதாக காவல்துறையின் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக வடக்கு கிழக்கைச் சேர்ந்த பலர் இவ்வாறு சட்டவிரோத பயணங்களை மேற்கொள்ள முயற்சித்த போது கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.