சண்டிலிப்பாய் சீரணி அம்மன் ஆலய வாகன பாதுகாப்பு நிலையத்தில் அதிகரித்த கட்டணம் அறவீடு: பக்தர்கள் விசனம்
யாழ்ப்பாணம் - சண்டிலிப்பாய் சீரணி நாகபூசணி அம்மன் ஆலயம் அருகே இயங்கி வரும் வாகன பாதுகாப்பு நிலையத்தில் வாகன பாதுகாப்புக்கு 50 ரூபா அறவிடுவது குறித்து பக்தர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
சண்டிலிப்பாய் சீரணி நாகபூசணி அம்மன் ஆலயத்தின் வருடாந்த உற்சவமானது நடைபெற்று வருகிறது. அந்தவகையில் வாகன பாதுகாப்பு நிலையம் ஒன்று ஆலயத்திற்கு அருகாமையில் செயற்பட்டு வருகிறது.
சொகுசு வாகனங்களுக்கான பாதுகாப்பு சீட்டு
அந்த வாகன பாதுகாப்பு நிலைத்தினால் வழங்கப்படும் வாகன பாதுகாப்பு சீட்டில் முச்சக்கர வண்டி மற்றும் அதிசொகுசு வாகன பாதுகாப்பு என்றே எழுதப்பட்டுள்ளது. ஆனால் மோட்டார் சைக்கிள், துவிச்சக்கர வண்டி உட்பட அனைத்து வாகனங்களும் அதே பாதுக்காப்பு சீட்டே வழங்கப்படுகிறது. மேலும் அனைத்து வாகனங்களுக்கும் 50 ரூபாவே பாதுகாப்பு கட்டணமாக அறவிடப்படுகிறது.

வெளியே நிற்கின்ற வாகனங்களையும் எடுத்து சென்று பாதுகாப்பு நிலைய வளாகத்திற்குள் விட்டுவிட்டு, அந்த வாகன உரிமையாளர்களிடமும் கட்டணம் அறவிடுவதை அவதானிக்க முடிந்தது
வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின் ஆளுகை
வாகன பாதுகாப்பு நிலையம் அமைக்க வேண்டுமானால் பிரதேச சபையின் அனுமதி பெறப்பட வேண்டும். பாதுகாப்பு சீட்டில் பிரதேச சபையின் இறப்பர் முத்திரை பதிக்கப்பட வேண்டும். ஆனால் இது இரண்டும் இடம்பெறவில்லை.

குறித்த ஆலயமானது வலிகாமம் தென்மேற்கு (மானிப்பாய்) பிரதேச சபையின் ஆளுகைக்குள்ளேயே காணப்படுகிறது. மேலும், ஆலயம் அமைந்துள்ள வட்டாரமானது பிரதேச சபையின் தவிசாளர் க.ஜெசீதனின் வட்டாரமாகும். தனது வட்டாரத்தில் இடம்பெறும் முறைகேட்டினையே தவிசாளர் கண்காணிக்காமல் இருப்பது பக்தர்களுக்கு அதிருப்தியையும் விசனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
எனவே இதுகுறித்து பிரதேச சபையானது விரைந்து நடவடிக்கை எடுத்து, பக்தர்களின் நலனை காக்க வேண்டும் என்பதே மக்களது கோரிக்கையாக உள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |