இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறல்- கடற்படையின் உடனடி நடவடிக்கை!
இலங்கை கடற்பரப்பிற்குள் சட்டவிரோதமான முறையில் பிரவேசித்து மீன்பிடியில் ஈடுபட்ட 23 இந்திய மீனவர்கள் பருத்தித்துறையில் கைது செய்யப்பட்டுள்ளனர் என கடற்படை பேச்சாளர் இந்திக்க டி சில்வா தெரிவித்தார்.
கிழக்கு கடற்பரப்பின் வெற்றிலைக்கேணி பகுதியில் வைத்து அவர்கள் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இதன்போது, அவர்கள் பயணித்த இரண்டு படகுகளும் கடற்படையினால் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்தார்.
கைதானவர்கள், காங்கேசந்துறை மயிலிட்டி துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளார்கள். இன்று இவர்களுக்கு கொரோனா பரிசோதனையின் பின்னர் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்திய மீனவர்களின் தொடர் அத்துமீறலைக் கண்டித்து எதிர்வரும் 17ஆம் திகதி கடலில் இறங்கிப் போராட்டம் நடத்த கூட்டமைப்பு அழைப்பு விட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.




