இந்திய பிரதமரின் முதன்மை செயலாளருடன் சிறிலங்கா உயர்ஸ்தானிகர் முக்கிய சந்திப்பு!
இந்தியாவிற்கான சிறிலங்காவின் உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொடவிற்கும், இந்திய பிரதமரின் முதன்மை செயலாளருக்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
சிறிலங்காவின் அதிபர் இந்தியாவிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளமை தொடர்பிலேயே சிறிலங்காவின் உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட, இந்திய பிரதமரின் முதன்மை செயலாளர் பிரமோட்குமார் மிஸ்ராவை சந்தித்துள்ளார்.
எனினும் சிறிலங்கா அதிபரின் உத்தியோகபூர்வ இந்திய பயணம் தொடர்பான திகதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. இது தொடர்பான சந்திப்பு புதுடில்லியில் இடம்பெற்றுள்ளது.
கலந்துரையாடல்
இந்தநிலையில், இந்திய பிரதமரின் முதன்மை செயலாளருடனான சந்திப்பின் போது, இரண்டு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் தொடர்பில் பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது இலங்கையுடனான இந்தியாவின் வரலாற்று மற்றும் ஆழமான உறவுகளை நினைவுகூர்ந்த இந்திய பிரதமரின் முதன்மைச் செயலாளர், அண்டை நாடு நெருக்கடியை எதிர்கொள்ளும் போது உதவுவது இந்தியாவின் கடமை என்று கூறியுள்ளார்.
இருதரப்பு ஒப்பந்தம்
இதேவேளை 2009ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி குஜராத் முதலமைச்சராக இருந்த போது இலங்கைக்கும் குஜராத் மாநிலத்துக்கும் இடையே கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்தைப் பயன்படுத்தி, சுற்றுலாத் துறையில் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து இருவரும் கலந்துரையாடினர்.
இதற்கிடையில் இலங்கையின் உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட, கடந்த சில வாரங்களில், இந்திய நிதிச் செயலர் டி.வி. சோமநாதன், அமைச்சரவைச் செயலர் ராஜீவ் கௌபா மற்றும் இந்தியாவின் மத்திய திட்டக்குழுவுக்கு மாற்றாக அமைக்கப்பட்ட குழுவான நிதி ஆயோக்கின் தலைவர் பரமேஸ்வரன் ஐயர் உட்பட இந்திய அரசின் பல முக்கிய அதிகாரிகளையும் சந்தித்து கலந்துரையாடினார்.
