இலங்கை இந்தியாவுடன் நட்புறவுடன் செயற்படுவது பாராட்டிற்குரியது!
இலங்கையில் சிறுபான்மை மக்கள் 13 வது திருத்த சட்டத்தின் ஊடாக மாகாண சபைகள் முறையையும் அதனுடைய அதிகாரங்களையும் அனுபவிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தமைக்கு முக்கிய காரணமாக இருப்பது இந்திய அரசாங்கம் என்று சொன்னால் அது மிகையாகாது.
இன்று அதற்கான அழுத்தத்தை மோடி அரசாங்கம் இலங்கைக்கு கொடுத்து வருவது அவர்கள் இலங்கை தமிழர்கள் மீது கொண்டுள்ள அக்கறையை எடுத்துக் காட்டுகின்றது.
எனவே தொடர்ந்தும் இந்திய அரசாங்கம் எங்கள் மீது கவனம் செலுத்தும் என்ற நம்பிக்கை எங்களிடம் இருக்கின்றது என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவருமான நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், இன்று இந்திய அரசாங்கம், விசேடமாக மோடி தலைமையிலான அரசாங்கம் இலங்கையில் அதிகமாக கவனம் செலுத்தி வருவதை காணமுடிகின்றது.
குறிப்பாக இலங்கையின் பொருளாதார முன்னேற்றம், சிறுபான்மை மக்களுடைய விடயங்கள், இந்திய அரசாங்கத்தின் மூலமாக வடக்கு கிழக்கு பகுதிகளுக்கு 50 ஆயிரம் வீடமைப்புத் திட்டம், மலையக பகுதிகளுக்கு 15 ஆயிரம் வீடமைப்பு திட்டம், மலையக கல்வி அபிவிருத்திக்காக வழங்கப்பட்டுள்ள பாரிய அபிவிருத்திக்கான நிதி, விசேடமாக புஸ்ஸல்லாவை பாடசாலை அபிவிருத்தி, அது தவிர மலையக பகுதிகளில் மேலும் 9 பாடசாலைகளை அபிவிருத்தி செய்வதற்கான நிதி இலங்கை மாணவர்களுக்கு கல்விக்கான புலமைப்பரிசில் திட்டம் என பல்வேறு உதவிகளை எங்களுடைய கல்வி அபிவிருத்திக்காக வழங்கி வருகின்றது.
வட மாகாணத்தில் அமைந்துள்ள பாடசாலை அபிவிருத்தி பொலநறுவை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மும்மொழி பாடசாலை அத்துடன் இலங்கையில் அமைந்துள்ள அநேகமான கல்வியியல் கல்லூரிகளை கணணி மயமாக்குவதற்கான நிதிஉதவி என பல்வேறு விடயங்களையும் குறிப்பிட முடியும்.
அது தவிர இந்திய அரசாங்கத்தின் முழுமையான நிதி உதவியுடன் ஹட்டன் கிளங்கன் பகுதியில் அமைந்துள்ள வைத்தியசாலை என்பன முக்கியவிடயமாக கருத முடியும். அது மட்டுமல்லாமல் மோடி, மலையக பகுதிகளுக்கு வருகை தந்து நேரடியாக இந்த மக்களை சந்தித்தது வரலாற்று சிறப்புமிக்க அம்சங்களாக அமைந்துள்ளது.
மேலும் டன்சினன் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியுடனான வீடமைப்பு திட்டத்தை பிரதமர் மோடி கானொளி மூலமாக கலந்து கொண்டு திறந்து வைத்தமை, அதன்போது அவர் பேசுகையில், இலங்கையில் இருக்கின்ற இந்திய வம்சாவளி தமிழர்கள் இந்தியாவின் வேர்களாக இருந்தாலும் இந்த நாட்டிற்கு வருகை தந்து விருட்சமாக வளரந்துள்ளதாகவும் அவர்கள் இரு நாடுகளையும் இணைப்பது மட்டுமல்லாமல் இந்திய பாரம்பரியத்தையும் கலை கலாச்சாரத்தையும் பாதுகாத்து வருகின்ற ஒரு அணியினராக நான்
அவர்களை பாரக்கின்றேன் எனவும் குறிப்பட்டார். இதன் மூலமாக அவர்கள் எங்கள் மீது கொண்டுள்ள அக்கறையை காண முடிகின்றது. ஒரு காலகட்டத்தில் இந்திய அரசாங்கம் எங்கள் மீது பாராமுகமாக இருந்தாலும் இன்று அந்த நிலைமை முற்றாக மாற்றமடைந்துள்ளது. அதுவும் மோடியின் ஆட்சியில் எங்கள் மீது அதிக அக்கறை செலுத்துவதை காணமுடிகின்றது.
இந்திய அரசாங்கத்தின் நிதியின் மூலமாக அமைக்கப்பட்டுள்ள கிளங்கன் வைத்தியசாலையில் பல குறைபாடுகள் இருப்பதை நானும் நன்கு அறிவேன். அந்த குறைபாடுகள் அனைத்தும் நிர்வாக ரீதியிலான குறைபாடுகளாகவே இருக்கின்றது.
மேலும் இந்த வைத்தியசாலை மாகாண சபையின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கின்ற காரணத்தாலேயே இந்த குறைபாடுகள் இருக்கின்றன.
மேலும் இந்த வைத்தியசாலையை இன்னும் அபிவிருத்தி செய்ய வேண்டுமாக இருந்தால் அதனை இலங்கை அரசாங்கம் மத்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து அதனை நிர்வகித்தால் மாத்திரமே சரியான முறையில் பராமரிக்க முடியும்.
எனவே அயல்நாடான இந்தியாவின் அனுசரணை எமக்கு மிகவும் முக்கியமானதாகும்.
ஏனெனில் எங்களுடைய பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கும் ஏனைய அபிவிருத்திகளை பெற்றுக் கொள்வதற்கும் அவர்களின் ஒத்துழைப்பு மிகவும் இன்றியமையாத ஒன்றாகும். எதிர்காலத்தில் இந்திய அரசாங்கம் இலங்கை நாட்டிற்கும் எங்களுடைய சிறுபான்மை மக்களுக்கும் விசேடமாக இந்திய வம்சாவளி தமிழர்களுக்கும் தன்னுடைய பங்களிப்பை பல வழிகளிலும் வழங்குவதற்கு தயாராக இருக்கின்றது.
இன்று இலங்கை அரசாங்கமும் இந்தியாவுடன் மிகவும் நெருக்கமான ஒரு உறவை பேணிவருவதை காணமுடிகின்றது. ஜனாதிபதி பிரதமர் அமைச்சர்கள் இந்த விடயத்தில் மிகவும் கவனமாக செயற்பட்டு வருகின்றார்கள்.
அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பல்வேறு தரப்பினரையும் சந்தித்து கலந்துரையாடியதுடன் எதிர்காலத்தில் பல்வேறு விடயங்கள் தொடர்பாக ஒத்துழைப்பு வழங்குவதற்கும் எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் சந்திப்பின் பொழுதும் பல காத்திரமான விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன் இதன் போது நான் முன்வைத்த இரண்டு பி.சி.ஆர் இயந்திரங்களை பெற்றுக் கொடுப்பது தொடர்பான கோரிக்கையை ஏற்றுக் கொண்டார்.
அதனை பெற்றுக் கொடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இலங்கைக்கான இந்திய தூதுவரிடம் பணிப்புரை வழங்கினார்.
இந்திய அரசாங்கம் பலாலி விமான நிலையம் காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தி என பல்வேறு விடயங்களிலும் தனது பங்களிப்பை செய்து வருகின்றது.
இன்று உலகம் முழுவதும் பரவி வருகின்ற கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள எங்களுடைய நாட்டிற்கு உடனடியாக உதவி செய்கின்ற முகமாக தடுப்பூசியை பெற்றுக் கொடுப்பதற்கும் முன்வந்துள்ளது.
இது இன்றைய நிலையில் மிகவும் இன்றியமையாத ஒரு உதவியாகும்.
இப்படி பல வழிகளிலும் இந்திய அரசாங்கம் செய்துவருகின்ற உதவிகளை நாம் மறந்து செயற்பட முடியாது.
மேலும் இலங்கையில் சிறுபான்மை மக்கள் 13 வது திருத்த சட்டத்தின் ஊடாக மாகாண சபைகள் முறையையும் அதனுடைய அதிகாரங்களையும் அனுபவிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தமைக்கு முக்கிய காரணமாக இருப்பது இந்திய அரசாங்கம் என்று சொன்னால் அது மிகையாகாது அதனை நாம் என்றும் மறந்து செயற்பட முடியாது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.