வடக்கு கிழக்கு தமிழருக்கு உடனடித் தீர்வு - இந்திய மத்திய இணை அமைச்சரிடம் யாழில் இடித்துரைப்பு!
வடக்கு கிழக்கு ஈழத் தமிழ் மக்களுக்கு காலம் தாழ்த்தாது உரிய தீர்வை வழங்குவதற்கு இந்திய அரசு சிறிலங்கா அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என நல்லை ஆதீன சுவாமிகள் இந்திய மீன்வள இணை அமைச்சரிடம் இடித்துரைத்தாக தெல்லிப்பளை துர்க்கா தேவி தேவஸ்தானத்தின் தலைவர் கலாநிதி ஆறு திருமுருகன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய மத்திய அரசின் மீன்வள இணை அமைச்சர் இன்றைய தினம் நல்லை ஆதீனத்திற்கு விஜயம் மேற்கொண்டு நல்லை ஆதீன முதல்வர் மற்றும் இந்து மாமன்றத்தின் உப தலைவரை சந்தித்து கலந்துரையாடினார்.
தமிழருக்கான தீர்வு

குறித்த சந்திப்பின் போது நல்லையாதீன முதல்வர் மேற்படி கோரிக்கையை விடுத்ததாக கலாநிதி ஆறு திருமுருகன் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
“திருக்கோணேஸ்வரர் ஆலயம் மற்றும் திருக்கேதீஸ்வரர் ஆலயத்தினை புனரமைத்தது போலவே அதனை பாதுகாப்பதற்கும் இந்திய மத்திய அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என இந்திய அமைச்சரிடம் கோரிக்கை விடுத்திருந்தோம்.
சிறிலங்கா அரசாங்கத்திற்கு அழுத்தம்

அதேபோல் நல்லை ஆதீன சுவாமிகள் தமிழரின் பிரச்சினை தொடர்பில் காலம் தாழ்த்தாது தீர்வு வழங்குவதற்கு இந்திய அரசு சிறிலங்கா அரசிற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருக்கின்றோம்.
அதேபோல இந்திய நிதி பங்களிப்பில் யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்திய கலாசார மத்திய நிலையத்தினை யாழ்ப்பாண தமிழ் மக்களிடம் கையளிக்கப்பட வேண்டும்.
அதனை சிறிலங்காவின் மத்திய அரசிடம் கையளிப்பதை இந்திய அரசு நிறுத்த வேண்டும் என கோரியதோடு, அதேபோல கிழக்கு மாகாணத்திலும் இந்திய துணை தூதரகம் ஒன்று உருவாக்கப்பட்டு அங்கு மக்கள் சேவையினை பெற்றுக்கொள்ள இலகுவாக அதனை செயல்படுத்த வேண்டும்” எனவும் கோரிக்கை விடுத்ததாகவும் ஆறு திருமுருகள் தெரிவித்துள்ளார்.