யாழில் இந்திய அமைதிகாக்கும் படை நிகழ்த்திய படுகொலை :இழப்பீடு வழங்க பரிந்துரை
இந்திய அமைதிகாக்கும் படையினரால் 1989 ஆம் ஆண்டு வல்வெட்டித்துறையில் மேற்கொள்ளப்பட்ட படுகொலை சம்பவத்தில் கொல்லப்பட்ட, காயமடைந்தவர்கள் மற்றும் சொத்திழப்புகளுக்காக 4.5 பில்லியன் இலங்கை ரூபா இழப்பீட்டினை வழங்க வேண்டும் என சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்றிட்டம் பரிந்துரைத்துள்ளது.
இந்திய அமைதிகாக்கும் படையினரால் நிகழ்த்தப்பட்ட வல்வெட்டித்துறை படுகொலை சம்பவத்தின் போதான இழப்புகளுக்கான இழப்பீட்டு அறிக்கை வெளியீட்டு நிகழ்வு மற்றும் கடந்த மார்ச் மாதம் வெளியிடப்பட்ட வல்வெட்டித்துறை ஒரு படுகொலையின் வாக்குமூலங்கள் அறிக்கையின் நூல் வெளியீட்டு நிகழ்வும் யாழ். வடமராட்சி ஊடக இல்லத்தில் செயலாளர் இரா.மயூதரன் தலைமையில் இன்று (19) ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு இடம்பெற்றது.
இழப்பீட்டு பரிந்துரை அறிக்கை வெளியீடு
வல்வெட்டித்துறை பிரஜைகள் குழுவின் அனுசரணையுடன் சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்றிட்ட அமைப்பினரால் தயாரிக்கப்பட்டுள்ள வல்வெட்டித்துறை படுகொலை சம்பவத்தின் போது நிகழ்ந்த இழப்புகளுக்கான இழப்பீட்டு பரிந்துரை அறிக்கையினை வல்வெட்டித்துறை பிரஜைகள் குழு செயலாளர் ந. அனந்தராஜ் வெளியிட்டு வைத்திருந்தார்.
இவ் இழப்பீட்டு பரிந்துரை அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது,
கொல்லப்பட்ட 66 பேருக்கும் 29.75 மில்லியன் இழப்பீட்டு தொகை
உயிர் இழப்பிற்கான இழப்பீடுகளை மதிப்பீடு செய்வதற்கு, இலங்கை அரசாங்கத்தினால் 2022 இல் மேற்கொள்ளப்பட்ட முடிவினை உதாரணமாக பின்பற்றி, ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் உயிர் இழப்பிற்கு 10 மில்லியன் இலங்கை ரூபாய்களை இழப்பீடாக வழங்கியதன் அடிப்படையில் 1989 ஆம் ஆண்டு நிலவரத்தின்படி 450 ஆயிரம் இலங்கை ரூபாய்கள் ஆகும். அதனடிப்படையில் வல்வெட்டித்துறை படுகொலை சம்பவத்தின் போது கொல்லப்பட்ட 66 பேருக்கும் 29.75 மில்லியன் (29,750,574.00) ரூபா இழப்பீடாக மதிப்பிடப்பட்டுள்ளது.
காயமடைந்த 36 பேருக்கான இழப்பீடாக 1.38 மில்லியன் (1,380,025.00) ரூபாவும், அழிக்கப்பட்ட சொத்துகளுக்கான இழப்பீடாக 57.59 மில்லியன் (57,597,068.00) ரூபாய்களுமாக மொத்தமாக 88.72 மில்லியன் (88,727,667.00) ரூபாய்கள் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
மேற்குறித்த தொகைக்கு 1989 ஓகஸ்ட் முதல் 2025 மே மாதம் வரையான காலத்திற்கான வட்டியாக 4.43 பில்லியன் (4,433,174,088.00) ரூபாய் சேர்த்து 4.5 பில்லியன் (4,521,901,754.00) ரூபாய் தொகையினை இழப்பீடாக வழங்க வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
வல்வைப் படுகொலை சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி
முன்னதாக வல்வைப் படுகொலை சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இதன்போது மாவீரர் ஒருவரின் தந்தை சுந்தரலிங்கம் பொதுச்சுடரினை ஏற்றியதை தொடர்ந்து பங்கேற்றியவர்களும் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தியிருந்தனர்.
தொடர்ந்து ந.அனந்தராஜ் மலர்தூவி அஞ்சலி செலுத்தியிருந்தார். தொடர்ந்து ஏனையவர்களும் மலரஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து ந.அனந்தராஜ் இழப்புகளுக்கான இழப்பீட்டு அறிக்கையினையும் வல்வெட்டித்துறை ஒரு படுகொலையின் வாக்குமூலங்கள் நூலினையும் வெளியிட்டு வைத்தார்.
நூலின் முதற்பிரதியை பருத்தித்துறை நகராட்சி மன்ற தவிசாளர் வின்சென் டீ போல் டக்ளஸ் போல் பெற்றுக்கொண்டதை தொடர்ந்து அதன் பிரதி மற்றும் இழப்பீட்டு பரிந்துரை அறிக்கை என்பன பங்கேற்றிருந்த பிரதிநிதிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டிருந்தது.
இந்நிகழ்வில், வல்வெட்டித்துறை பிரஜைகள் குழு செயலாளர் ந.அனந்தராஜ், பருத்தித்துறை நகரசபை தவிசாளர் வின்சென் டீ போல் டக்ளஸ் போல், தமிழரசு கட்சி பதில் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், சாவகச்சேரி நகராட்சி மன்ற உப தவிசாளர் ஞா.கிஷோர், பருத்தித்துறை பிரதேச சபை தவிசாளர் உதயகுமார் யுகதீஸ், கரவெட்டி பிரதேச சபை உப தவிசாளர் தி.தயாபரன், வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாச தலைவர் த.சந்திரதாஸ், உப தலைவர் நா.வர்ணகுலசிங்கம், பருத்தித்துறை வர்த்தகர் சங்க செயலாளர் மயூரன், காணி உரிமைகள் அமைப்பை சேர்ந்த முரளிதரன், வடமராட்சி ஊடக இல்ல தலைவர் கு.மகாலிங்கம் உள்ளிட்ட உறுப்பினர்கள் மற்றும் பருத்தித்துறை வர்த்தகர் சங்க நிர்வாக உறுப்பினர்கள், பாதிக்கப்பட்ட பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
